Friday, July 29, 2011

மதிப்புக்கூடும் மருத்துவக் கல்வி

கயத்தாரில் எந்தக் கடையில் கேட்டாலும் குத்துக்கல் விற்கும் பாட்ஷா பாய் வீட்டிற்கு வழி சொல்லிவிடுகிறார்கள். கங்கைகொண்டானில் வாங்கியிருக்கும் ஒரு க்ரௌன்ட் நிலத்திற்கு வேலி போட 30 குத்துக் கல் தேவைப்பட்டது. காலை சுமார் 8மணியளவில் பாட்ஷாபாய் வீட்டை அடைந்தோம். பாயிடம் விபரத்தைச் சொன்னவுடன் உடனே ஏற்பாடு செய்து தருவதாக சொல்லிவிட்டார்.

பாட்ஷாபாய் மிகவும் சுவராசியமாக பேசக்கூடியவராக இருந்தார். எனக்கும் கவனமாக கேட்பது ஒரு கற்றுக்கொண்ட கலை. ஒருவரின் பேச்சை கவனமாக கேட்பது என்பது அவரை ஊக்குவிப்பதின் முதல்படி.

பாட்ஷா பாயும், தான் சாதாரண ஆளாக இருந்து இன்று ஒரு கட்டிட காண்ட்ராக்டராக ஆகி பல லட்சங்கள் சம்பாதித்திருப்பதை சொல்லிப் பெருமைப் பட்டுக் கொண்டார்.

பேரன் சுலைமான் மருத்துவம் படிக்கப் போவதாக சொன்னார். தனியார் மருத்துவக் கல்லூரியில் முப்பது லட்சம் ரூபாய் கேபிடேஷன் பீஸ் கட்டிவிட்டு வந்திருப்பதாகப் பெருமைப் பட்டுக் கொண்டார். ஒவ்வொரு வருடமும் ஆறு லட்சம் பீஸ் என்றும் போக்குவரத்துச் செலவு உட்பட கிட்டத்தட்ட அறு வருட படிப்பிற்கு ஆகும் செலவு மொத்தம் நாற்பது லட்சம் வரை ஆகிவிடும் என்றார்.

கிட்டத்தட்ட எழுபது லட்சம் ரூபாய் கணக்குச் சொல்கிறீர்கள். சுலைமான் நன்றாக படித்து டாக்டராக வாழ்த்துக்கள் என்று கூறி விடை பெற்றுக்கொண்டேன்.

என்னுடைய டாக்டர் நண்பர்கள் Anatomy என்ற சிம்ம சொப்பனத்தைப் பற்றி அடிக்கடிச் சொல்வார்கள். சுமாரான மார்க் வங்கியிருக்கும் சுலைமான் போன்றவர்கள் இதையெல்லாம் எப்படிப் படித்துப் பாஸாவார்கள்? கட்டிடக் காண்ட்ராக்ட் என்னும் அருமையான தொழில் கைவசம் இருந்தும் டாக்டர் படிப்பை எழுபது லட்சம் கொடுத்துப் படிக்க வேண்டிய அவசியம் என்ன?
இவ்வளவு அதிகப் பணத்தினைச் செலவு செய்து படிப்பவர்கள் எந்தளவு சேவையுள்ளம் கொண்டவராக இருப்பார்கள்? ஒரு வேளை நன்றாகப் படித்து முடித்துவிட்டால் இந்தியாவில் சேவை செய்வாரா? பேரன் அமெரிக்கா போன்ற வெளி நாட்டில் இருப்பதைத் தான் பாய் கௌரவம் என்று கருதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் இங்கே அப்படித்தான் நடக்கிறது.

டாக்டர்கள் மேல் இருக்கும் உயர்மதிப்பும், இந்தத் துறையில் பணம் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்பும் தான் இப்படியொரு முடிவை எடுக்க வைக்கிறது. கௌரவத்திற்காக செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையாது. திறமையாக செயல்பட அற்பணிப்புத் தேவை. ஆனால் பற்று ஓங்கிய நிலையில், என்ன செலவானாலும் ஆசைப்பட்டது நடக்க வேண்டும் என்று தான் மக்கள் இயல்பாகச் செயல்படுவர்.

இன்றைய நிலவரப்படி, மத்திய அரசு கல்வி நிலையமான Indian Institute of Management பட்டமேற்படிப்பாகிய MBA படிப்பிற்கு வசூல் செய்யும் தொகை இருபது லட்சம்!

தமிழ் நாட்டில் BE படிப்பிற்கு ஆகும் செலவு ஐந்து லட்சம் முதல் இருபது லட்சம் வரை. சொத்தை அடமானம் வைத்தால் வங்கிகள் கடன் உதவி என்ற பெயரில் தங்கள் தொழிலை அபிவிருத்திச் செய்துகொள்ளத் தயார்.

பெருநகரங்களில் LKG, UKG பீஸ் ஒரு லட்சம்.

இவற்றையெல்லாம் கேள்விப்பட்டு கல்வி வியாபாரத்தின் அசுர வளர்ச்சி கண்டு வியந்து நிற்கின்றேன். ஐந்து லட்சமோ, ஐம்பது லட்சமோ, செலவு செய்ய மக்களுக்கு மனமும் பணமும் அமைந்திருப்பது சந்தோஷமான விஷயம் தான். சிறந்த ஒன்றை என்ன விலையானாலும் வாங்கியே தீருவது என்ற மனப்போக்கும் வளர்ந்து வருவது புலப்படுகிறது.

மருத்துவம் தான் நோக்கம் என்றால் பாட்ஷா பாய் ஹோமியோபதி, சித்தா முதலிய துறைகளில் பேரனை அனுப்பியிருக்கலாம். வசதி படைத்தவர் என்பதால் அவருடைய உற்றார் இதற்குச் சம்மதிக்க மாட்டார்கள். இதற்கு அலோபதி டாக்டர்களுக்கு இருக்கும் அபரிமிதமான கௌரவமும், மதிப்பும் காரணம்.

அலோபதி மருத்துவம் தான் சிறந்தது, எல்லா வியாதிகளுக்கும் தீர்வைக் கொண்டிருப்பது என்ற தவறான நம்பிக்கை சமூதாயத்தில் நிலவி வருகிறது.
இதற்குக் காரணமாக இருப்பவைகள்
  • உடனடியாக நோய் தீர வேண்டும் என்ற எண்ணம்
  • பண புழக்கம்,
  • மருந்துக் கம்பெனிகளின் சுறுசுறுப்பு,
  • மேலைநாட்டு அங்கீகாரம்,
  • அவசர சிகிச்சை முறைகளிலும், நோய் கண்டறியும் முறைகளிலும் உள்ள முன்னேற்றம் முதலியன.
இந்தத் துறையில் பல்லயிரக்கணக்கான மக்கள் ஈடுபட்டு அலோபதி மருத்துவத்தை வாழ்வாதாரமாகக் கொண்டிருப்பது மற்றுமோர் காரணம். மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பது டாக்டர்களின் மதிப்பை மேலும் உயரச் செய்கிறது.

இந்தத் துறையில் நேர்மையில்லாத் தன்மையும், அதிக பணம் ஈட்டும் நோக்கமும் பெருகிவருவது ஒரு துரதிருஷ்டமான விஷயம். மருத்துவக்காப்பீட்டுத் திட்டங்களையும் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு நேர்மையில்லாத்தன்மை நிலவி வருவது மாறவேண்டும் என்று நாம் ஆசைப்பட மட்டுமே முடியும். இது நடந்தேறுவது என்பது டாக்டர்கள் கையில் தான் இருக்கிறது.

Sunday, July 3, 2011

மதுரை என்றால் பயமா?


(இதில் விவரிக்கப்பட்டுள்ள விஷயங்கள் உண்மையானவையே)

வெகு நாட்களுக்குப் பிறகு என்னுடைய கோவை நண்பர் மோகனசுந்தரம் தொலைபேசியில் அழைத்தார்.

வெங்கட், என்னுடைய பெண்ணிற்கு பிரபல வங்கியில் வேலை கிடைத்துள்ளது. MBA முடித்தவுடன் முதல் வேலை. வேலை உங்கள் ஊரில்" என்றார்.

"வேலையும் நல்ல நிறுவனத்தில். முதலில் வேலை செய்ய வேண்டிய இடமும் தமிழ்நாட்டில் ஒரு தலை சிறந்த நகரத்தில். உங்களுக்கு இரட்டிப்பு மகிழ்சி தானே.” என்றேன்.

"மதுரைன்னா கொஞ்சம் பயமாக இருக்கே. வேற ஊராய் இருந்தாக்கூட பரவாயில்லை. என்ன நீங்க இருப்பது ஒரு தைரியம் தான்." என்றார்.

சமீப காலத்தில் வந்த சினிமாக்களைப் பார்த்துவிட்டு மதுரையைப் பற்றி தவறாக நினைத்துக்கொண்டு பேசுகிறீர்களா?” என்றேன்.

"பின்னே இல்லையா?” என்றார். கொஞ்சம் அசந்தே போய் விட்டேன். பிறகு மதுரையின் சிறப்புக்களை விளாவாரியாக எடுத்துக் கூறி அவருடைய மகளுக்குக் கிடைத்த வாய்ப்பு சிறந்த ஒன்று என்று எடுத்துக் கூறினேன்.

இது ஒருபக்கமிருக்க, இப்படி மதுரையைப் பற்றி தவறான அபிப்பிராயத்துடன் எத்தனை பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்களோ என்று தோன்றியது. ஒரு பதிவு மூலம் சிலருக்காவது உண்மை நிலையை விளக்க எண்ணியதன் விளைவுதான் இந்த வலைப்பதிவு.

சமீபத்திய திரைப்படங்களில் காண்பிக்கப்படுவது போல் மதுரையில் முனு முனு என்று பேசிக்கொண்டு இருப்பது கிடையாது. மதுரைக்காரர்களான திரைப்பட நடிகர்கள் வடிவேலு, விவேக் போன்றும் பட்டிமன்றப் பேச்சாளர்களான சாலமன் பாப்பய்யா, லியோனி, ஞானசம்பந்தம் மற்றும் ராஜா போன்றும் தெளிவாக, வாய்விட்டு, கணீரென்று பேசும் பழக்கம் இங்கு இருந்து வருகிறது.

புதிதாகச் சந்திப்பவர்களையும் அண்ணே, அக்கா, அத்தை, அம்மா, தாத்தா, பாட்டி என்று உறவினர் போல் சட்டென்று நெருக்க உணர்வுடன் பேசுவது மதுரைக்கரார்களின் தனிச்சிறப்பு. லகர, ளகர, ழகர உச்சரிப்பு மிகத் தெளிவாக கையாளப்படும் லாவகமும் வேகமும் வேறெங்கும் மதுரையளவுக்குக் கிடையாது. வாக்கிய முடிவுகளில் சற்றே நீட்டி முடிக்கும் பாங்கு ஒரு பாச உணர்வை ஏற்படுத்தத் தவறுவதில்லை. என்னதான் சிறப்பாக ஆங்கிலம் தெரிந்தாலும் அதன் சாயலேயில்லாமல் மக்களிடம் அன்பாகத் தமிழில் பேசும் பாணி மதுரையின் கற்றறிந்த மாந்தரின் தனிச்சிறப்பு.

வழிப்போக்கர் எவருக்கேனும் வழி சொல்வதானாலும் மிகவும் விளக்கமாக இன்முகத்துடன் சொல்லுவார்கள். தப்பான மற்றும்தெரியாத திசையைக்காட்டியதாக எனக்குத் தெரிந்தவரையில் இல்லவே இல்லை.

மதுரை மக்களுக்குச் சற்று நகைச்சுவை உணர்வு அதிகம். அதன் பிரதிபலிப்பாய் சீரியசான விஷயத்தைக்கூட சில நேரம் யார் மனமும் புண்படா வண்ணம் நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்தி விடுகிறார்கள்.

மதுரையில் சாப்பாடு பற்றி எந்த வேளையிலும் பிரச்சனையில்லை. சைவ சப்பாடு என்று தேடும் பொழுது சில இடங்களும், சில உணவு வகைகளும் கைவிட்டுப் போகும் தான். சைவமோ அசைவமோ சரியென்றால் நாளெல்லாம் இரவு 12 மணிவரை சப்பாட்டைப் பற்றிக் கவலைப் பட வேண்டியதேயில்லை.

மதுரையின் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பற்றிக் கூற ஒரு வலைப்பதிவு மட்டும் போதாது. பிரமாண்டத்திற்கும், பக்திக்கும்,வரலாற்றுச் சிறப்பிற்கும் இதை மிஞ்ச வேறோரு கோவில் உலகத்தில் எங்கும் கிடையாது. கோவிலைச் சுற்றியுள்ள கடைகளில் மக்களை வெகு சிறப்பாகவே வரவேற்று உபசரிப்பதையும், எதைச்செய்தாலும் ஒரு சகோதரப் பாசத்துடன் செயல்படுவதையும் காணலாம்.

மதுரையின் ஜிகர்டண்டா மற்றும் பஜ்ஜி,வடை என்ற சிற்றுண்டிகள் நம்முடைய பாரம்பரிய ஃபாஸ்ட் ஃபுட் (Fast Food). மதுரையின் புரோட்டா
சால்னா ஏங்க வைக்கும் சுவை கொண்டது.

எந்த பெரு நகரத்தில் உள்ளது போலும் இங்கும் எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாய் கோர சம்பவங்கள் நடக்கலாம். ஆனால் இவையே மதுரையில் தினமும் நடக்கும் சம்பவங்கள் போல் பொறுப்பில்லாமல் ஊடகங்கள் பறை சற்றினால் அதைநம்ப வேண்டியதில்லை.

மதுரையென்றால் பயம் வேண்டாம், பாசம் வைக்கலாம், வாய்ப்பிருந்தால் நேசமும் வைக்கலாம்.

பயப்படாதீங்கண்ணே, பயப்படாதீங்கக்கா, நாங்க இருக்கோம்ல்லே.......