Sunday, May 29, 2011

சாமியாராகும் ஆசை

கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே எனக்கு மனவளம், ஆன்மீகம், யோகக்கலை, வாழ்வியல் முதலிய அசாதாரண விஷயங்களில் ஈடுபாடு உண்டு. இந்தவகைப் புத்தகங்களை நான் படிப்பது என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பிடித்ததில்லை.ஆனால் இந்த விஷயங்களைப்பற்றி யாரிடமும் நான் பேசுவதில்லை என்பதால் இந்தப்பழக்கத்தை அவர்கள் பெரிதுபடுத்தியதுமில்லை.

கல்லூரிப்படிப்பு முடிந்ததும் வடஇந்தியாவில் வேலை அமைந்தது. தோதாகத் தோழர் ஒருவரும் அமைந்ததால் அந்த ஊரிலொரு வீடு பார்த்து இருவரும் குடிபோய் வேலைக்குச் சென்று வந்து கொண்டிருந்தோம்.

தோழரும் என்னைப் போலவே விருப்பம் உடையவர். சரியான ஜாடிக்கு ஏற்ற மூடி. பெரிய ஊராக இருந்ததால் ஆன்மீகச் சொற்பொழிவுகளுக்குக் குறைவில்லை. முடிந்த வரை மாலை நேரங்களில் திறந்தவெளி அரங்குகளில் நடக்கும் புகழ்பெற்ற அன்மீகப் பேச்சாளர்களின் உரைகளைக் கேட்பதும் அதில் தெரிந்து கொண்ட விஷயங்களைப் பின் நாட்களில் மொட்டை மாடியில்நின்று கொண்டு தர்க்கம் செய்வதுமாக நாட்கள் நகர்ந்தன.

வாழ்வியல் அடிப்படையில் மக்களுக்கு உதவுவதற்கு சன்யாசியாக இருந்தால்தான் முடியும் என்ற கருத்து மனதிற்குள் உருவாக எத்தனித்துக்கொண்டிருந்தது. இருந்தாலும் வாழ்வியல் புரிய வேண்டும் என்றால் திருமண வாழ்வின் அனுபவமும், குழந்தைகளைப் பெற்று வளர்த்த அனுபவம் மிக முக்கியம் என்ற கருத்து என்னுள் உறுதியாக இருந்ததால் சன்யாசி ஆகும் ஆசையை 60 வயதுக்குப் பிறகு ஒத்திபோட்டேன்.

பல சாமியார்கள் இந்த அனுபவங்கள் இல்லாமலேயே இந்த விஷயங்களில் அறிவுரை வழங்குவதும், அவர்கள் பின்னால் மக்கள் கூட்டம் அலைமோதுவதும் வினோதமான யதார்த்த உண்மை. பத்துப் பதினைந்து கிரிக்கெட் மேட்ச் பார்த்த கிரிக்கெட்டின் தீவிர ரசிகன் ஒருவன் சதம் அடிப்பது எப்படி என்று பாடம் நடத்தினால் மக்கள் கேட்பார்களா? ஆனால் அதேநிலையில் இருக்கும் சாமியார்கள் மட்டும் மக்களை எப்படி தம்பின்னால் வரும்படி செய்துவிடுகிறார்கள்.

எது எப்படியோ,  ஊருக்குவந்து ஒரு கல்யாணமும் செய்து கொண்டாயிற்று. குழந்தை ஒன்றும் பிறந்து விட்டது. ஊர் ஊராகச் சுற்றும் வேலை ஒன்றும் கிடத்தது.

விற்பனை அதிகாரி என்ற தகுதியும் எல்லா இடங்களுக்கும் காரிலே பயணம் செய்யும் வசதியும் இருந்தது. ஒரு முறை வியாபார நிமிர்த்தமாக கேரளா சென்று கொண்டிருந்தேன்.என்னுடன் கம்பெனி மேலாளர் ஆங்கிலோ- இந்தியர் ஒருவர் காரில்பயணம் செய்து கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் பின் இருக்கையில் அமர்ந்திருந்தோம். வெளியில் மழைத்தூரல் போட்டுக்கொண்டிருந்தது.ஓரு நால்வழி சாலை சந்திப்பில் நாங்கள் போக வேண்டிய வழியை உறுதிசெய்யும் பொருட்டு ஓட்டுனர் காரை நிறுத்தினார். பின் சீட்டின் இடது பக்கம் நான் அமர்ந்திருந்தபடியால் கண்ணாடியை இறக்கிவிட்டு வெளியில் நடந்துபோய்க்கொண்டிருக்கும் ஒருவரை நிற்குமாரு செய்கைகாட்டினேன். அவர் உடனே தூரலுக்கு விரித்து வைத்திருந்த குடையை மடக்கித்தன் கக்கத்தில் வைத்துக் கொண்டு இருகரம் கூப்பி மிகபணிவுடன் என்னை வணங்கிவிட்டு அவர் போகின்ற போக்கில் தன் நடையைத் தொடர்ந்தார்.

அந்த ஒருகனம் ஒன்றும் புரியவில்லை எனக்கு. மேலாளரோ விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் கவனித்தேன், காவி நிறத்தில் பருத்தியிலான முழுக்கைச் சட்டை அணிந்திருந்தேன். என்னுடை செய்கையை, அவரை நான் அசீர்வதிப்பதாக அவர் புரிந்து கொண்டுவிட்டார் போலும். எனக்குள் இருக்கும் சாமியார் ஆசை லேசாக எட்டிப்பார்த்துவிட்டுப்போனது. அந்த உடையில் ஒரு சாமியார் போன்று தெரிகிறேனா என்று மேலாளரிடம் கேட்டேன். அமாம், அமாம் என்று சொல்லிவிட்டு சிரிப்பைத் தொடர்ந்தார். பிற்காலத்தில் சாமியாராகி ஆசிரமம் கட்டி பெரு வாழ்வு வாழவேண்டும் என்று கூறி அந்த உரையாடலை நகைச்சுவையாகவே முடித்துவிட்டேன்.

சாயங்காலம் ஹோட்டலில் ரூம் போட்டபின் சாமியாராவதற்கு என்ன என்ன தகுதிகள் வேண்டும் என்று யோசித்தேன்.

முதலாவதாக மனம், அமைதி, ஆத்மா போன்றவிஷயங்களைப் படித்துத் தெரிந்து கொண்டு தானே உணர்ந்ததாக சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.

மதங்கள் சொல்லாத விஷயங்களை, சொல்வதாகச் சொல்ல வேண்டும். அவ்வப்பொழுது மதங்கள் உங்களுக்கு அமைதிகிடைக்க உதவாது. உண்மையான ஞானம் பெற குரு ஒருவரால்தான் வழிகாட்டமுடியும் என்று சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். எனக்கு ஒரு பனிமலையில் அமையதியான சூழலில் ஞானம் கிடைத்தது என்று கூறி மக்களை நம்ப வைக்க வேண்டும்.

யோகத்தின் எட்டு நிலைகளைப் பற்றியும் ஒரளவு தெரிந்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக பத்மாசனத்தில் முகம் சுழிக்காமல் அரைமணி நேரமாவது அமர கற்றுக்கொள்ள வேண்டும். ப்ரணயாமம் செய்யக் கற்றுக் கொண்டு எந்தப் பயிற்சியில் என்ன அனுபவம் என்பதை உணர்ந்து கொண்டால், ஐந்து நிமிடத்தில் மனதை அமைதியாக்கும் சூட்சமம் தெரிந்துவிடும். நீட்டி ஓம்காரம் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.

மிதமான ப்ரணயாமப் பயிற்சி, ஓம்கார ஜெபம் சொல்லிகொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் .

யதார்த்தமான விஷயங்களைத் தத்துவம் போல் கம்பீரமாகச் சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும்.

அடிக்கடி காரணமில்லாமல் கெக்கே - பிக்கே என்று சிரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கூடவே தான் நித்ய ஆனந்த நிலையில் இருப்பதாகக் கூறிக்கொள்ள வேண்டும்.

' பழைய ஜன்னலை மூடு! புதிய ஜன்னலைத் திற !!' என்பதைப் போன்ற ஒரு தலைப்பைப்  பிரசங்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கான நிரந்தர தலைப்பாய் அறிவித்துக்கொள்ள வேண்டும்.

தியானம், மனக்கட்டுப்பாடு என்று பேசக்கற்றுக் கொள்ள வேண்டும்.

பஜனை செய்வது,  கூட்டுவழிபாடு போன்றவற்றையும் கற்றுக்கொள்ளவேண்டும்

இந்த அத்தனை விஷயங்களும் ஒன்றும் பெரிதாகத் தோன்றவில்லை. இவற்றையெல்லாம் கற்றுக்கொண்டு மக்களைக் கவர்ந்து அவர்களுக்கு நிம்மதியளிக்கிறேன் என்று சொல்லி அவர்களை ஆட்டு மந்தைகளைப் போல் என் பின்னால் தொடரவைக்க என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.

ஆன்மீகமானலும், லௌகீகமானாலும் அத்தனையும் மனத்திற்குட்பட்ட மாயை என்ற தெளிவு பிறந்தது. ஆவரவர் மாய உலகை அவரவர் புரிந்துகொள்ள முடிந்தமட்டும் உதவவேண்டும் என்ற முடிவு அப்பொழுதே பிறந்தது.

சாமியார் ஆகவேண்டும், ஆசிரமம் கட்டி செட்டில் ஆக வேண்டும் என்ற ஆசை மாயமாய் மறைந்தே போயிற்று.

Saturday, May 21, 2011

கனவு மெய்ப்பட வேண்டுமா?



கனவு : இந்த வார்த்தை தான் சமீப காலமாக அதிகளவில் பேசப்படுகிறது. மக்கள் இதைப் புரிந்து கொள்கிறார்களோ இல்லையோ, கார்ப்பரேட் உலகில் இந்த வார்த்தை தனக்கென்று ஒரு பிரத்யேகமான இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த வார்த்தையை அடிக்கடி சொல்லிக் கொள்வது நாகரீகமாகக் கருதப்படுகிறது. இந்தப் பதம் சமீப காலமாக இவ்வளவு பிரபல்யமானதற்கு ஒரு காரணம், நமது முன்னாள் ஜனாதிபதி Dr.A.P.J. அப்துல்கலாம் அவர்கள் நம் நாட்டு இளஞர்களை ஊக்குவிக்க இதைப் பயன்படுத்தியதால் கூட இருக்கலாம்.

உங்களூக்குள்ளே திடமான கனவு ஒன்று இருந்தால், உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் வரிசையில் விழுந்து, உங்கள் கனவு நனவாகும் என்பது மிகவும் உண்மை. இதற்கு சான்றாக என் வாழ்நாட்களிள் பல நிகழ்வுகளை எடுத்துக் கூற முடியும். என்ன ஒரு சின்ன சிக்கல் என்றால் திடமான கனவை எவ்வாறு ஏற்படுத்திக் கொள்வது என்பது தான். ஒருவருடைய அடிப்படை மனநிலையைப் பொறுத்தே அவருடைய கனவுகள் உருவாகும். தற்போது இருக்கும் நிலை மிகவும் சுகம் அளிப்பதாக மனநிலை இருக்கும் பட்சத்தில் "THE MAGIC OF THINKING BIG” போன்ற புத்தகம் படிப்பது எந்த வகையிலும் உங்கள் கனவை உருவாக்கிக் கொள்ள வழி வகுக்காது. ஒரு புத்தகத்தைப் படிப்பதற்கே அதற்கான மனோபக்குவம் தேவைப்படுகிறது.

நாம் அனைவரும் அவரவர் விருப்பத்திற்கேற்ற சூழ்நிலைகளில் பிறந்தவர்கள் அல்ல. அவரவருக்கு என்று குறிப்பிட்ட வசதிகளும், பொறுப்புகளும் உள்ளன. ஏதோ சில வழிகளில் தான் உங்கள் கனவானது உங்களுக்குள்ளே வந்தடையும். சாலையில் போகும் ஒரு காரைப் பார்க்கும் போது அதைத் தனக்குச் சொந்தமாக்கி அதில் பயணிப்பது போல் கனவு உருவாகலாம். ஆக்க பூர்வமான மனிதர்கள் கனவு காண்பது என்பதை இயற்கையில் அமையப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். கனவு காண்பவர்களே சிறந்த தலைவர்களக உருவாக முடியும்.

அரசாங்கத்திலும், கார்ப்பரெட் நிறுவனங்களிலும் பல தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அவர்களுடைய மேலதிகாரிகளின் லட்தியத்திற்குத் தான் வேலை செய்கிறார்கள். இதற்கு மிகுந்த கீழ்படிதலும் வேலையில் முனைப்பாக இருந்தலும் மட்டுமே போதுமானது. அவர்கள் அடையும் வெற்றி அவர்களின் கனவால் கிடைக்கப் பெறவில்லை.மாறாக வேறு ஒருவரின் திடமான கனவால் கிடைத்த வெற்றியாகும். இவ்வாறு பெறும் வெற்றியினால் பல நேரங்களில் மன அழுத்தம் ஏற்பட வாய்பிருக்கிறது. இதன் விளைவு உடல் ஆரோக்கியக்குறையாக எதிரொலிக்கிறது. ஆனால் மற்றவரது இலட்சியத்தை தனக்கே உரிய கனவாக மாற்றிக் கொண்டால் அந்தக் கனவை நோக்கிச் செய்யும் வேலையில் சலிப்பு ஏற்படாது. அவ்வாறு செய்யும் வேலை நாம் மிகவும் ரசித்து அனுபவிக்கும் செயலாக இருக்கும். நாம் இலக்கு, இலட்சியம், கனவு ஆகியவற்றின் மிகச் சரியான அர்த்தததைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இலக்கு என்பது குறி பார்த்து அடிப்பது. துப்பாக்கியால் சுடும் ஒருவனுக்கு அவன் எதிரே குறிபார்த்து சுடுவதற்கு வைத்திருக்கும் பொருள் தான் அவன் இலக்கு ஆகிறது. இலட்சியம் என்பது குறி பார்த்து அடிக்கின்ற திறனை வளர்த்துக் கொள்வது. கனவு என்பது நாம் குறிப்பார்த்து அடிக்கும் திறன் கிடைக்கப்பெற்று அடுத்தடுத்து வெற்றி பெரறுவதாக உணர்வதாகும்.

பயிற்சி தொடங்குவதற்கு முன்பே நம்முள்ளே கனவு உருவாகியிருக்க வேண்டும். அப்போது தான் இலட்சியம் நிறைவேறி இலக்கை எட்ட முடியும். பெரும்பாலும் பொருள் மற்றும் திறன் சம்பந்தப்பட்ட கனவுகள் நிறைவேறிவிடும். இன்னொருவரைச் சம்பந்தப்படுத்திக் காணும் கனவானது சில நேரம் பாதிநிறைவேறும் அல்லது எதுவுமே நிறைவேறாமல் கூட போகலாம். இதனால் தான் தற்போது பல திருமணங்கள் முறிந்து போகின்றன. ஒரு ஆணின் கனவும் ஒரு பெண்ணின் கனவும் பல முறை ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஆண் கிராமப்புற வாழ்வுக்கு ஆசைப்படலாம், ஆனால் பெண்ணோ மெட்ரோ பொலிட்டன் நகர வாழ்வை ஆசைப்படலாம். கணவன், மனைவி இருவருக்கும் ஒரே மாதிரியான அல்லது இணையான கனவு இருக்க வேண்டும். இது முடியாத பட்சத்தில் ஒருவரின் கனவை இன்னொருவர் ஆமோதி்க்க வேண்டும்.

பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கனவுகள் குழந்தைகள் மீது திணிக்கப் படுவதால் அவர்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். சில வெறித்தனமான பெற்றோரும் ஆசிரியர்களும் தங்களுடய நிராசைகளை, இலக்குகளை குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். குழந்தைகளின் மனம் எல்லாவற்றையும் ஏற்க முடியாத நிலையில் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு தோல்வியையே சந்திக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

சமீபத்தில் நான் கம்ப்யூட்டரில் பார்த்த வீடியோ காட்சி ஞாபகத்திற்கு வருகிறது. கல்வி கிடைக்கப்பெறாத ஒரு சின்னப் பையன் ஒரு டீ கடையில் வேலை செய்கிறான். ஒரு நாள் பக்கத்தில் இருக்கும் அப்பார்ட்மென்டில் கொடுப்பதற்க்காக சில டம்ளர்களில் டீயை எடுத்துச் செல்கிறான். அபார்ட்மென்ட் கதவு மூடியிருக்கிறது. கதவை தள்ளினால் உட்புறமாக திறக்கும் என்று எண்ணிய அவன் கதவை தன் பலம் கொண்ட மட்டும் தள்ளுகிறான். கதவு திறக்கவில்லை. திடீரென்று பள்ளியிலிருந்து வீடு திரும்பிவரும் இன்னொரு சிறுவன் சற்றும் சிரமம் இல்லாமல் அந்தக் கதவை வெளிப்புறமாக இழுத்து திறக்கிறான். கதவைத் திறந்த அச்சிறுவன் படிக்காத மற்றச் சிறுவனுக்குக் கதவில் கட்டப்பட்டிருக்கும் "இழு" என்ற போர்டைச் சுட்டிக் காட்டுகிறான். டீக்கடை சிறுவனால் படிக்க முடியவில்லை. கல்வி கதவைத் திறக்கும் என்ற தலைப்போடு வீடீயோ காட்சி முடிகிறது.

கல்வி நம் கண்ணோட்டத்தை மேம் படுத்தும் என்ற தலைப்போடு வீடியோ முடிந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். கல்வி கற்ற சிறுவன் அந்தக் கல்வியால் மேம்பட்ட கண்ணோட்டத்தினால் கதவை இலகுவாகத் திறக்க முடிந்தது. கல்வி எதையும் செய்யும் என்று மக்கள் நம்பவைக்கப்படுகிறார்கள். கல்வி என்பது ஒரு கருவியே. அடிப்படை மனப்போக்கு தான் ஒருவனின் கனவை உருவாக்கும். கல்வி கற்ற ஒருவருக்குக் கூட தான் ஆசைப்பட்ட பல விஷயங்கள் கிடைக்காமல் போகலாம். ஆனால் வலுவான கனவு படைத்த ஒருவருக்கு, தான் ஆசைப்பட்டவை எல்லாம் கிடைக்கிறது. ஏனென்றால் அவர் ஆசைப்பட்டதைப் பெறுவதற்குத் தேவையான மிதமான தகுந்த கல்வியறிவை அவரால் பெற்றுக்கொள்ள முடியும். சில நேரங்களில் அளவுக்கு அதிகமான கல்வி, வலுவான கனவு அல்லது இலட்சியம் இல்லாமல் இருக்கும் பட்சதத்தில் ஒருவருக்கான கனவை உருவாக்கிக் கொள்ளவும் தடை செய்யக்கூடும்.
இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு பழங்கால கதையை சொல்லலாம். ஒரு தந்தைக்கு இரண்டு மகன்கள். தந்தைக்கு ஒரு இனிமையான மாம்பழம் கிடைக்கிறது. அப்பழத்தை சாப்பிடுபவர்கள் சிறந்த ஞானம் பெறுவர்
என்பது அதன் தனிச்சிறப்பு. தந்தைக்கு அதை தன் இரு மகன்களுக்கும் கொடுக்க ஆசை. ஆனால் ஒரு நிபந்தனை என்ன வென்றால் பழத்தை பங்கிடக் கூடாது என்பது தான்.தன் மனைவியை சாட்சியாகக் கொண்டு தன் இரு மகன்களில் யார் முதலில் இந்த உலகைச் சுற்றி வருதிறார்களோ அவருக்குத் தான் அந்த ஞானப்பழம் என்ற போட்டியை அறிவிக்கிறார். துடிதுடிப்பான இளைய மகனிடம் ஒரு மயில் இருக்கிறது. அந்த மயில் மேல் அமர்ந்தால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பறந்து செல்லலாம் என்ற நம்பிக்கையில் அதன் மேல் ஏறி உலகைச் சுற்றி வந்து பழத்தைப் பெறுதற்காகப் புறப்படுகிறான். மூத்த மகன் புத்திசாலி. தந்தை அறிவித்த போட்டியயை பகுத்தறிந்து தன்னுடைய பெற்றோர் தான் உலகம் என்பதை உணர்கிறான்.
தன் தம்பியோ உலகம் என்பதை இந்த பூமி தான் என தவறாகப் புரிந்து கொண்டு உலகைச் சுற்றி வரப் போயிருக்கிறான் என்பதை புரிந்து கொள்கிறான். தன்னுடைய பெற்றோரை நிமிடத்தில் சுற்றி வந்து ஞானப்பழத்தைப் பெறுகிறான் மூத்த மகன் என்பது தான் கதை. இங்கே மயிலை கல்விக்கு ஈடாகக் கூறலாம். உலகம் என்ற வார்த்தையின் சரியான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள கல்வியைக் காட்டிலும் புத்திக்கூர்மை தான் தேவைப்படுகிறது. திடமான கனவு தான் இந்த புத்திக் கூர்மையை நம்முள் தூண்டி விட முடியும். கனவு தான் விழிப்புடனும், புத்தியுடனும் எல்லாச் சூழ்நிலைகளிலும் மிகச் சரியாக செயல்படவும் வழிவகுக்கும்.

எனவே நாம் ஏதாவது ஒன்றை அடைய ஆசைப் பட்டால், நாம் அதைப் பற்றிய கனவை உருவாக்கி கொண்டு அடைய நினைத்ததை அடைந்து விட்டதாக எண்ணி அந்த மாதிரிச் சூழ்நிலையில் வாழ்கின்ற படி கனவு காண வேண்டும். இந்த வித்தை எனக்குப் பலித்திருக்கிறது. இந்த வித்தை என்னைப் போல் கனவு காண்பவரையும் இனிமையான பயணத்தில் இட்டுச் செல்லும்.
நீங்கள் உங்கள் கனவை நிர்ணயிக்கவில்லையென்றால், மற்றவர்களால் அவர்கள் வேலைகளுக்காகப் பயன்படுத்தப்படுவீர்கள். எனவே உங்கள் கனவை நிர்ணயிங்கள். மற்றவர்களை தவறாகப் பயன் படுத்தாதீர்கள். உங்கள் கனவுகளுக்காக அவர்களுடைய சேவைகளை பெற்றுக் கொண்டீர்களானால், அவர்கள் கேட்டதைப் பிரதிபலனாக கொடுத்துவிடுங்கள்.
    வழி காட்டுவதாக கனவு காணுங்கள்.
    கொடுப்பதாக கனவு காணுங்கள்.
    உதவுவதாக கனவு காணுங்கள்.
    உங்கள் பின்னால் மக்கள் வருவார்கள்.

பிறருக்கு கொடுக்கப்போதுமான வளம் கிடைக்கப்பெறுவீர்கள்.
பிறருக்கு உதவுவதற்கு நிறைந்த சக்தி அருளப்பெற்றவராய் திகழ்வீர்கள்.



****************************

Wednesday, May 18, 2011

அடிமையாக்கும் ஆன்மீகப் பயணங்கள்




ஒவ்வொரு வருடம் டிசம்பர் மாதம் தொடங்கியவுடன் சாதி மத பேதமின்றி எல்லா மக்களும் ஏதாவது ஆன்மீக செயல்களில் ஈடுபட்டுவிடுகிறார்கள். இதற்குக் காரணம் கிறிஸ்துவர்கள் டிசம்பர் ஆரம்பித்தவுடனே கிறிஸ்துமஸ் பண்டிகையை ஆரம்பித்து விடுவதால் கூட இருககலாம். அவர்கள் கிறிஸ்துமஸ் வரையில் அவர்கள் சார்ந்திருக்கும் சர்ச்சின் உறுப்பினர் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சாண்டாகிளாஸ் மற்றும் ஒரு குழுவினருடன் சென்று மதப் பாடல்களைப் பாடி மகிழ்வர்.

டிசம்பர் வரும் போது இஸ்லாமியர்கள் தங்களுடைய ரம்ஜான் நோன்பை முடித்து அவர்களுடைய ஆன்மீகத்தை வெகுவாக வெளிபடுத்தியிருப்பார்கள். அடுத்து இப்போது இந்துக்களின் முறை. எல்லா புனிதமான தூய்மையான செயல்களுக்கும் 45 நாட்கள் விரதம் அனுஷ்டிக்கப் பட வேண்டியிருக்கிறது. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதாவது நம் உடலில் உள்ள அனைத்து செல்களும் 45 நாட்களில் புதுப்பிக்கப் படுகின்றன என்பதால்.

சைவ சமயத்தினர் அவர்களுக்கு உரிய விரதத்தைக் கடைபிடித்து முருகன் கோவில்களுக்கு புண்ணிய யாத்திரை செல்கின்றனர். நம் இதிகாசங்களில் சொல்லப்படும் கதைகளி்ன் அடிப்படையில் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் பொதுவாக ஐயப்பன் கோவிலை யாரோ சிலர் நிர்மானித்திருக்கிறார்கள். ஐயப்பன் யாத்திரைக்குத் தயாராக கடுமையான பயிற்சிகளை மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. அதிகாலையில் எழுவது, தினமும் இரண்டு முறை குளிப்பது, சைவ உணவு உண்பது, மற்றும் பிரம்மச்சரியம் போன்ற பயிற்சிகள்

நம்முடைய மனோபாவம் மற்றும் செயல்கள், நாம் உண்ணும் உணவைப் பொறுத்தே அமைகின்றன. இது மிகப் பழமையான காலத்திலேயே நம் முன்னோர்களால் அனுபவிக்கப்பட்டு இருக்கிறது. பகவத் கீதையிலும் இது சொல்லப்பட்டிருக்கிறது.

இது உடல்ரீதியாக தயார் ஆவது. விரதம் இருக்கும் கடவுளுக்காக பூஜை, பஜனை செய்வது மனரீதியாக தயார் படுத்திக் கொள்வதாகும்.. விரதத்தை அனுஷ்டிக்கும் மக்கள் அவர்களுக்கு என்று பிரத்யேகமான உடைகளை உடுத்திக் கொள்கிறார்கள். இவ்வாறு அணிவதால் பக்தர்கள் தங்கள் விரதத்திற்கு மாறாக யாராவது எதையாவது தமக்குக் கொடுப்பதிலிருந்து காத்துக் கொள்கிறார்கள்.

வெளிப்படையாகச் சொன்னால் ஒவ்வொரு தனி நபருக்கும் அவரவர் விருப்பத்திற்கேற்ப வாழவும் அவரவர் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் சுதந்திரம் இரு்க்கிறது. அது போல் 45 நாட்கள் மேற் கொள்ளும் விரதத்தினால் உடல் சுத்தமாகும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பலர் செய்வதென்னவோ சகிக்க முடியாத ஜோடனை தான். கோயில்களுக்குச் செல்லும் உல்லாசப் பயணம் பிரதானமாகி மற்ற செயல்கள் எல்லாம் இரண்டாம் பட்சமாகிறது. இதில் ஐயப்பன் கோவிலுக்கு ஆண்கள் மட்டும் செல்கிறார்கள். பெண்கள்தவிர்க்கப் படுகிறார்கள்.

முருகன் கோயிலுக்கோ நடந்தே செல்கிறார்கள். மூன்று அல்லது நான்கு நாட்களில் 120முதல் 160 கி.மீ வரை நடக்கிறார்கள்.

இதன் உச்சகட்டம் தான் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஐயப்பன் கோவிலிலும் சரி முருகன் கோவிலிலும் சரி பல லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். அவர்களின் இறுதியான லட்சியம் கோவிலில் இருக்கும் சுவாமியின் சிலையை தரிசனம் செய்வது தான்.

இந்தப் பயிற்சியில் முக்கிய அம்சமான விரதம் இரண்டாம் பட்சமாகிறது. எவ்வளவு கூட்ட நெருக்கடியிலும் சுவாமி தரிசனம் தவிர்க்கப்படுவதில்லை. இதையே பிரதானமாக்கி மதத் தலைவர்கள் கோவில்களுக்கு கூட்டம் சேர்க்கும் நோக்கத்துடன் விதிகளை நிர்ணயம் செய்கிறார்கள். இவ்வாறு செய்யும் முறையால் பக்தர்கள் அவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறார்கள். ஒருவர் தன் வசதிக்கேற்ப கோவிலுக்குச் செல்ல தவறிவிட்டால் அவரைச் சுற்றியிருக்கும் ஒட்டு மொத்த ஆன்மீகக் கூட்டம், கடவுள் அவரைத் தண்டிக்கக்கூடும் என்றும், ஏதாவது தவறாக நடக்கும் என்றும் பயமுறுத்துகின்றனர். அதனால் அந்த தனி நபர்(பக்தர்) தொடர்ச்சியாக மூன்று முறை கோவில் பயணம் மேற்கொள்ளும் நிலைக்குத் த்ள்ளப்படுகிறார்.

பூஜைகள் மனதை மந்தப் படுத்துகின்றன. இது மன அமைதி என தவறாக கருதப்படுகிறது. மனம் மந்தமடைந்து தெளிவற்றதாகி விடுகிறது.. இவ்விதமான பயிற்சிகள் ஒருவனை கோழையாக்கிக் கடவுளிடத்தும் எதிர்காலம் பற்றிய பயத்தையும் ஏற்படுத்துகிறது. அற்புதத் செயல்களின் மீதான நம்பிக்கைக் கூடுகிறது. தன்னம்பிக்கை காணமல் போகிறது. தங்கள் வேண்டுதல் நிறைவேறும் பட்சத்தில் கடவுளுக்குக் காணிக்கையாக பணத்தைக் கொடுக்கவோ அல்லது அடுத்தடுத்து கோயில்களுக்குச் செல்லவோ முனைகிறார்கள்.

சற்று பகுத்தறிந்து பார்த்தால் கடவுளுக்குக் கொடுக்கும் காணிக்கை, கோயில்களின் முக்கியத்துவத்தையும் வருமானத்தையும் அதிகரிக்கவே பயன்படுகிறது என்பது விளங்கும். கடவுளைப் பற்றி பல கதைகள் சொல்லி அற்புதங்கள் நிகழும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் பலப்படுத்துகிறார்கள். இது ஒரு network marketing
போல் போய்க் கொண்டே இருக்கிறது. Network marketingல் செயல்படும் தலைவர்கள் இந்த முறைகளை, இவர்களிடமிருந்து தான் காப்பியடிக்க வேண்டும் போல் தெரிகிறது.

ஒருவர் மிகுந்த வருதத்திலோ அல்லது நம்பிக்கை இழந்த நிலையிலிருக்கும் போது கோவில்களில் நடக்கும் அதிசயங்களைப் பற்றிய கதைகளால் ஈர்க்கப்பட்டு, இந்த பக்த கோடிகளுடன் இணைந்து விடுவார். இந்த இணைப்பைச் சில நேரம் ஜோதிடர்களும் குறி சொல்பவர்களும் ஏற்படுத்துகிறார்கள். இந்த மாதிரியான ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் ஜோதிடம், கைரேகை போன்ற விஷயங்களில் நம்பிக்கை ஏற்படுத்திக் கொண்டு வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு மிகக்குறைவான சாதனை புரிந்தவர்களாக வாழ்கிறார்கள்.

இதில் மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால் அவருடைய தலைமுறையினருக்கு அவரின் நம்பிக்கையை ஏற்றுகொள்வது அல்லது இந்த விரதங்களில் ஈடுபடும் பொழுது அவரை விட்டு விலகி நிற்பது என்ற இரு நிலைகளிள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்.

கடவுள் நம்பிக்கை மனித உறவுகளைக் கெடுக்கக்கூடாது. உண்மையான கடவுள் நம்பிக்கை அன்பைப் புரிந்து கொள்ள வழி செய்வதாய் இருக்க வேண்டும். ஞானமடைந்த ஒருவர் தன்னையும் கடவுளையும் உணர்ந்தவராக இருக்கவேண்டும். அவரால் தான் தனக்குள்ளே இருக்கும் கடவுளை கண்டுகொள்ள முடியும்..


அஹம் ப்ரஹ்மாஸ்மி

 ***********************************************************

Saturday, May 7, 2011

காயத்ரி மந்திரம் வெறும் நம்பிக்கையல்ல மிகப்பெரிய உண்மை- பகுதி-2

வெறும் நம்பிக்கைகளை நம்பினால் நம்புங்கள் என்றபாணியில் சொல்லிவிட்டுப் போய்விடலாம். உண்மைகளை, உணர்வதற்கான பாதையை மட்டுமே காட்டலாம். இனிவரும் கருத்துக்களைப் படிக்க முற்படுபவர்கள், இந்த தொகுப்பின் முதல் பகுதியைப் படித்துவிட்டுத் தொடருங்கள்.முதல் பகுதிக்குப் பின்னூட்டம் எழுதி என்னை ஊக்குவித்த வலைப்பதிவு நண்பர்களுக்கு நன்றி.

முதல் வரியைக் குறிப்பிடவில்லையே ஏன்? இந்த மந்திரத்தை அறிந்தவர்களாக இருந்தால் இந்தக் கேள்வி மனதில் எழும்.

சூரிய ஒளியில் நின்றுகொண்டு " நம்முடைய புத்தியை ஊக்குவிக்கும் அருள்மிகு சவிதூரிலிருந்து கிடக்கப்பெறும் ஒளியைத் தியானிக்கிறோம்" என்று சொல்லிக்கொள்வதே மந்திரம்.

தத் சவிதூர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹீ
தியோ யோந: பிரச்சோதயாத்

இதைச் சொல்லி முடிப்பதற்கு 10 வினாடிகளே போதுமானது.ஆனால் அலைபாயும் மனதை தியான நிலைக்குக் கொண்டுவர 10 வினாடிகள் போதுமா?

படைக்கப்பட்ட எல்லாமுமே நகர்ந்து கொண்டிருந்தால் நகர்ந்து கொண்டே இருக்கும், கிடந்தவண்ணம் இருந்தால் கிடந்தே இருக்கும். அவற்றின் மேல் ஏதேனும் விசைகள் செயல்ப்ட்டால் இந்தநிலைகள் மெதுவாகவே மாறும். அதுபோலவே எப்போதும் இயக்கத்தில் இருக்கும் மனதைச் சட்டென்று தியான நிலைக்குக் கொண்டுவரமுடியாது.

சக்தி வாய்ந்த ஒளிக்கதிர்களின் முன் இருந்தால், குறைந்தது 100 விநாடிகளில் மன ஓட்டத்தைத் திசைத் திருப்ப முடியும்.

இந்த அடிப்படையில் திரும்பத் திரும்ப மந்திரத்தை சங்கல்பம் செய்தால் 100 வினாடிகளில் 10 முறை மந்திரம் ஜெபிக்க முடியும்.

மனதை ஒரு பொருளின் மீது நிறுத்த முயற்சி செய்து பாருங்கள். எகிறி ஓடத்தான் பார்க்கும். தியான முறைகளில் ஒரு பொருளின் மீது மனதை நிறுத்துவதைவிடச் சிறந்த முறை இருக்கிறதா?

காயத்ரியில் ஒளியைத் தியானிக்க வேண்டும். அப்படியென்றால் இதுவும் மனதை நிறுத்த முயற்சி செய்வது போலாகிவிடுமல்லவா?

ஒளியைத் தியானிப்பதனையும் கடந்து ஏதாவது சிறப்பு காயத்ரியில் இருக்கிறதா?

சங்கல்பம் செய்வதில் நம் புத்தியைப் பற்றியும் இருக்கிறதே.

மனது, புத்திக்கும் ஒளிக்கும் இடையே ஒரு நேர்கோட்டுப் பதையை தியானிக்க முற்படும். சங்கல்பத்தில் தன் நிலை உணர்வையும் சேர்த்துக் கொண்டால், நேர்கோட்டுப்பாதை முக்கோணப் பாதையாக உருமாருவதை உணரலாம்.

முக்கோணப்பாதை மனதை சுழற்சிக்கு வழிசெய்யும். இயக்கத்தில் சுழற்சி என்று ஆகிவிட்டாலே சுழற்சி மையம் ஒன்று அமைந்துவிடும். இந்த மையத்தைச் சுற்றி மனம் எளிதாக சுழன்று தியானம் சுலபமாய் கைகூடும்.

தன் நிலை உணர்வைக் குறிக்க
ஓம் பூர் புவ: சுவ:
(OM BHUR BHUVAHA SUVAHA)
என்று மனதின் நான்கு நிலைகளையும் உள்ளடக்கிய சொற்றொடர் காயத்ரியின் முன்னால் இணைக்கப்படுகிறது.

ஓம்- சிந்தனையற்ற விழிப்பு நிலை.
பூர் - நிகழ்காலத்தில் செயலாற்றலில் ஈடுபட்ட நிலை
புவஹ- கனவும்,கற்பனையும் ஆகிய நிலை
சுவஹ- உறக்கநிலை.

ஓம் பூர் புவ: சுவ: என்ற சொற்றொடர் இறைவழிபாட்டிற்கு சொல்லப் படும் மந்திரங்கள் அத்தனையிலும் முதல் வரியாகி நிற்கிறது.

ஓம் பூர் புவ: சுவ: சேர்த்து ஒரு முறை காயத்ரி ஜபம் செய்ய 14 வினாடிகள் ஆகும். 10 முறை ஜபம் செய்ய 140 வினாடிகள் அதாவது நிமிடமே தேவைப்படும். இந்தக் குறைந்த பட்ச அளவே போதுமானது. இந்த அனுபவம் சுகமாகப் பட்டால் 28 முறை சொல்ல நிமிடம் அதாவது ¼ நாழிகைக்கு கணக்கு வரும். மனம் முழுவதுமாக அமைதியடைந்து அமைதியுணர்வு நெடுநேரம் நீடிக்க 1 நாழிகை நேரம் தியானம் தேவைப்படுவதை அனுபவத்தில் உணர்ந்ததால், 108 முறை காயத்ரி சங்கல்பம் செய்வது பரிந்துரைக்கப் படுகிறது போலும்.

108 முறை செய்வதற்கு அதிகாலை நேரமோ, அந்திமாலையோதான் உகந்த நேரம். இந்த அளவு உலக விஷயங்களில் பற்றற்ற நிலையைக் கொடுக்கக் கூடும்.

சாதரணமாக 10 முறை சங்கல்பம் என்பது தினசரி பயிற்சிக்குப் போதுமானது.நின்றுகொண்டே கூடச்சொல்லி முடித்துவிடலாம்.

சமஸ்கிருத ஒலிச் சேர்க்கையால் 24 எழுதுக்களில் அமைந்த காயத்ரி மந்திரத்தின் ஒலியின் அதிர்வுகள், நம்முடைய சுவாசமண்டலத்தை பரிசுத்தமாக்குவதை உணரமுடிகிறது. தொண்டையில் சளியோ, இருமலோ இருக்கும் காலங்களிலும், ஜலதோஷம் பிடித்துள்ள நாட்களிலும், எழாவது - எட்டாவது முறை மந்திரம் சொல்லும் பொழுதே தொண்டை அடைத்துக்கொள்வதை பலமுறை உணர்ந்திருக்கிறேன். ஜபம் முடிந்தவுடன், குரல் மிகத்தெளிவாக மாறி இருப்பதையும், சுவாசம் நன்றாக இருப்பதையும் உணர முடிகிறது.

காயத்ரியின் உண்மையை உணர்ந்து கொள்ள இந்த இரட்டைப் பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.