Saturday, April 30, 2011

திருமணமும் காதலும்: காதலும் திருமணமும்

உரை நடை, இலக்கியம், நாடகம் மற்றும் சினிமா, புதுக் கவிதைகள் எல்லா படைப்புகளும் 1950க்கு அப்பால் பிரபலமாகி கிட்டத்தட்ட கடந்த ஐந்து தலைமுறைகளுக்கும் காதலே மிகவும் புனிதமானது என்ற முடிவை ஆழமாக புகுத்தியிருக்கின்றனர்.  காதல் தெய்வீகமானது என்றும், புனிதமானது என்றும் புகழ்பாடி பல லட்சங்களையும் கோடிகளையும் குவித்து இள நெஞ்சங்களை பிடித்துப் போட்டு வைத்திருக்கிறது இன்றைய கலையுலகம். காதல் இல்லையேல் பலருக்கு வருமானம் இல்லை. எனவே காதல், லக்ஷ்மி கடாக்க்ஷமாக, தெய்வீகமானது. காதலிப்பவர்களுக்கா என்று மட்டும் கேட்கக் கூடாது.

காதல், திருமணத்தில் முடியும் போது பல நேரங்களில் தோல்வியாகிவிடுகிறது. தெய்வீகமும், புனிதமும் அப்பொழுது கூட தோல்வியுற்ற காதல் உண்மைக்காதல் அல்ல என்று உயிருக்கு உயிராய் காதலித்தவர்களையும் கட்டி விட்டு விடுகின்றன.
காதலை விட முக்கியமான விஷயம், திருமணத்தை முடிவு  செய்ய தேவையா ? அப்படியென்றால் அவை என்னவாக இருக்கும்?

காதல் என்பது இருமங்கள் மட்டுமே சம்மந்தப் பட்டது. திருமணம் என்பது இரண்டு குடும்பங்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த சமூகம், அடுத்து பிறக்கும் தலைமுறைகள் என்று அநேக விஷயங்கள் சம்மந்தப்பட்டது.
கண்டதும் காதல், மனதில் லட்சம் சிறகுகள் முளைப்பது, ஒரு கோடி நிலாவின் வெளிச்சம் காண்பது எல்லாமே காதலின் உணர்வுகளின் வெறித்தனமான ஒரு வெளிப்பாடு. காதல் என்ற காம நெருப்பு   தாம்பத்தியத்தால் மட்டுமே தணிக்கப்படும். அதுவரை கொளுந்துவிட்டு எரிந்து காதலர்களைப் பைத்தியங்களாக்கி முடக்கிப் போடும் சக்தி வாய்ந்தது. திருமணத்தில் இந்த அபாயம் வெற்றி கொள்ளப் படுகிறது.

காதலோ, திருமணமோ வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழி வகுக்க வேண்டுமென்றால் கவனிக்க வேண்டிய விஷயங்கள் உங்கள் சிந்தனைக்கு:

1முதலாவதாக மணமகன், மணமகள் இருவருக்கும் ஒருவருக்கு ஒருவரை மிகவும் பிடித்திருக்க வேண்டும்.

2.வாழ்க்கைத் துணையாக நாம் தேர்ந்தெடுக்கும் நபர், குடும்பம் என்ற அமைப்பைப் பற்றிய தெளிவான அறிவு, செல்வத்தைப் பற்றிய விழிப்புணர்வு, மகிழ்வாய் இருக்கும் தன்மை, சுற்றத்தாரை மதிக்கும் குணம் இவை நான்கும் அமையப் பெற்றவராக இருக்க வேண்டும்.

குடும்ப அமைப்பைப் புரிந்து கொண்டு உற்றாரை மதிக்கத் தெரியாதவராக இருப்பவர்களால் குழப்பங்கள் ஏற்படும். செல்வத்தைப் பற்றிய விழிப்புணர்வு இல்லையென்றால் ஆடம்பரங்களில், பகட்டுகளில் மதி மயக்கும் விஷயங்களில் செல்வத்தை விரயம் ஆக்குபவராக இருப்பர். எந்தசிடுமூஞ்சியும் வாழ்க்கைக்குக் சுகம் தரமாட்டார்கள். உறவினர்களையும், நண்பர்களையும் அன்போடு அணுகும் முறையில்லையென்றால் உள்ள சொந்தங்களும், நட்புகளும் விலகிப் போகும் அபாயம் உண்டு.

 3 .வரனின் குலமும், குடும்ப சூழலும் இனிய திருமண வாழ்விற்கு ஒரு முக்கியமான பங்கு வகிக்கும். குழந்தைப் பருவத்தில் முதல் ஐந்து வயது வரை ஏற்பட்ட அனுபவங்கள், கற்றுக் கொண்ட பணிவு, மரியாதை எல்லாமே குலத்தையும், நற்குடிப்  பிறப்பையும் சார்ந்திருக்கும் என்பது உளவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை.  எனவே இதையும் கருத்தில் கொள்ள வேண்டும்

 4.வரன் நன்றாக கல்வி கற்றவராக இருக்கலாம். ஆனால் குடும்பத்தில் தலைமைப் பொறுப்பேற்க அநேக விஷயங்களைக் கற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

 5. ஒவ்வொரு வரனின் குணாதிசயங்களிளலும் நல்ல விஷயங்களும் சில நல்லவை அல்லாத விஷயங்களும் இருக்கலாம். நல்லவை அல்லாதவை குடும்ப வாழ்க்கையை பாதிக்காதவையாக இருத்தல் வேண்டும்.

6.இவற்றையெல்லாம் மனதில் கொண்டு தேர்ந்தெடுக்கும் நபர் பழகிப் பார்க்கும் பொழுது நமக்கு ஏற்றவர் அல்லாதவராக இருந்தால் காதலையோ, திருமண ஏற்பாட்டையோ சட்டென்று முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டியதுதான். மணமகன், மணமகள் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி சிறிது காலம் கழித்து இந்த விஷயங்களை உன்னிப்பாக ஆராய்ந்த பிறகே திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதுவரை பழகும் பழக்கம் வரம்புகள் மீறாதபடிக்கு குறிப்பாக மகளிர் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்.

7.நற்குணங்கள் எதுவும் இல்லாமல், வறுமையிலே  வாடுபவர்கள் திருமணத்திற்கு ஏற்றவர் அல்லர். வறுமையை வென்ற பிறகு தான் திருமணத்திற்குத் ஒருவர் தயாராகிறார். கதைகளில் வருவது போன்று கல்யாணத்திற்குப் பிறகு சரியாகிவிடும் என்பது எதிர்நீச்சல் போடுவதைப் போன்றது.

8.மிகுந்த செல்வம் இல்லாவிட்டாலும், நல்ல குடிப்பிறப்பு, சிறந்த நண்பர்கள், நற்குணங்கள், கல்வியறிவு, பணிவு, மனிதநேயம் இவையெல்லாம் உள்ளவராக இருப்பவர் திருமணம் செய்துகொள்ளத் தகுதியானவரே. செல்வத்தை மட்டும் முன்னிறுத்தி இத்தகைய நல்ல வரனை ஒதுக்க வேண்டியதில்லை.

 9. செல்வந்தராக இருப்பினும், மனித நேயம் தெரியாதவர்களை, பிறரை மதிக்காதவர்களை, கர்வமாகத் திரிபவர்களை ஏற்க வேண்டியது இல்லை. அவர்களுக்கு ஏமாளிகள் தான் கிடைப்பார்கள்.

 10. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், கண்டதும் காதல் என்ற அடிப்படையில் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்தால், உறுதியாக திருமண வாழ்வு தோல்வியில்  தான் முடியும்.

11. அவசரத் திருமணங்கள், பொருந்தாத திருமணங்கள் தங்களுக்கு மட்டுமல்லாமல் தங்கள் சொந்தங்களையும் சந்ததியினரையும் வெகுவாக பாதிக்கும்.

இத்தனை விஷயங்களையும் வைத்து திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டபின் மணமகனும், மணமகளும் நூறு வருடங்கள் இணைந்தே வாழ உறுதி கூறி நிறைவேறுவது திருமணம்.

“மாங்கல்யம் தந்துநானேன மம ஜீவன ஹேதுனா


கண்டே பத்னாமி சுபகே த்வம் ஜீவ ஷரதாம் சதம்

(“இந்த மாங்கல்யமே என்னுடைய வாழ்க்கை. இதை உன் கழுத்தில் நான் அணிவிக்கிறேன்.என்னுடன் நூறு வருடம் இணைந்து வாழ்வாயக.”)

என்று மணமகன் கூறி (புரோகிதர் இந்த வரிகளைச் சொல்வது எனக்கு ஏற்புடையதாக இல்லை) உறுதி கூறுவது ஹிந்து வழக்கம். இதையொட்டியே மற்ற மதத்தினரும் உறுதி கூறி திருமண பந்தத்தில் இணைகிறார்கள்.

ஒரு சில விஷயங்கள் மறைக்கப்பட்டு திருமணம் நடந்தேறியிருந்தாலும், அதையே சுட்டிக் காட்டி ஒருவரை ஒருவர் குற்றம் பாராட்டுவது கூடாது. நல்ல விஷயங்களை ஊக்குவித்து மென்மேலும் வாழ்க்கையில் உயரும் வழியில் மனதைத் திருப்பிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறாகத் தேர்ந்து இணைத்துக் கொண்ட வாழ்க்கைத் துணையை சந்தேகிப்பது தீராத துயரத்தைத் தரும். குடும்ப பொறுப்புகளில் தங்களுடைய விருப்பம், திறமை இரண்டையும் கருத்தில் கொண்டு,  குடும்ப பொறுப்புக்களை பிரித்துக்கொண்டு, சுதந்திரமாக பொறுப்புக்களை கையாண்டால் மணவாழ்வு சுவையாகும்.
                         ********************************




Wednesday, April 27, 2011

காயத்ரி மந்திரம் வெறும் நம்பிக்கையல்ல , மிகப் பெரிய உண்மை !!!

மென்திறன் சிந்தனைகள் என்ற வலைபதிவுகளில் ஆன்மிக விஷயங்கள் இடம் பெறுவது எவ்வாறு என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். மென்திறனும் ஆன்மீகத்தின் ஒர் அங்கம் என்பதால், இந்த விஷயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
தன்னை மீறிய சக்திகளைப் பற்றிய நம்பிக்கைகளில் மூன்று நிலைபாடுகள் இருப்பதாக உணர்கிறேன்.
  1. ஆத்திகம்:- மிக அதிக மக்கள். மதம் சார்ந்து ஒரு சில முறைகளில் கடவுளை வழிபடுவது. இதில் சடங்குகள், வழிபடும் முறைகள் என்று பலவிதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருக்கும்.
  2. நாத்திகம்:- கடவுள் நம்பிக்கை இல்லாத நிலை குறிப்பாக ஆத்திகத்தை எதிர்க்கும் நிலையாகக் கொள்ளலாம்.
  3. ஆன்மீகம்:- நாத்திகம், ஆத்திகம் இரண்டிற்கும் அப்பாற்பட்டு, இறைநிலையை அகத்திலும், புறத்திலும் உணர்ந்து, உடல், மனம், புத்தி,ஆத்மா எல்லாவற்றையும் உணர்ந்த நிலை. இந்த நிலையை எட்டுவது கடினம் என்று ஆத்திகர்கள் சொல்லி வருகிறார்கள். நாத்திகர்கள் இதை அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை.
உண்மையான ஆன்மீக வாதிகள், ஆத்திகர்களையோ, நாத்திகர்களையோ பொருட்படுத்துவதில்லை.
ஆத்திகர்கள் ஆன்மீக விஷயங்களை தமதுடைமையாக்கி தங்களுக்கு ஒரு முக்கியத்துவம் கிடைக்கும் வண்ணம் ஆன்மிக விஷயங்களை ஒரு கருவியாக உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதை உணர்ந்து கொள்வது மிக மிகக் கடினம். உளவியல் ரீதியாக நமக்குள் ஐந்து வயதுக்குள் புகுத்தப்பட்டுள்ள நம்பிக்கைகளை நாமே கேள்வி கேட்டுக் கொள்ள அசாதாரண மன பலம் வேண்டும். ஐந்தில் வளைந்தது ஐம்பது வரை வளைந்தே இருக்கும்.
ஆத்திகத்தில் சிறைப்படுத்தப்பட்டுள்ள விஷயங்களில் காயத்ரி மந்திரமும் ஒன்று. காயத்ரி மந்திரம் காயத்ரிதேவியின் வழிபாடு என்று நினைத்திருந்தேன். தற்செயலாக சின்மயா மிஷன் வெளியீடு ஒன்று என் கைகளில் கிடைத்தது. மந்திரத்தின் பொருளில் காயத்ரி தேவியோ மற்றெந்த உருவகக் கடவுளோ இல்லையென்பது எனக்கு மிகுந்த சுவாரசியத்தை ஏற்படுத்தியது.
ஆனால் ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் தரப்படவில்லை. திரண்ட கருத்தாக அர்த்தம் சொல்லப்பட்டிருந்தது. கடவுள் நம்பிக்கை என்ற தளத்திற்கு அப்பால் விளக்கம் செல்லவில்லை.
இந்த மந்திரத்தைச் சொல்வதால் புத்தி கூர்மை உண்டாகும் என்ற நம்பிக்கையை வலியுருத்தியே விளக்கம் நின்றது. எப்படி இது சாத்தியம் என்ற கேள்வியே தேவையில்லை என்ற ரீதியில் முடிக்கப்பட்ட விளக்கம்.
இது குறித்த பல புத்தகங்களிலும், இது இந்து மத மந்திரமாகவும், இந்துக் கடவுள்களின் அருள் கிடைக்கச் சொல்லப்படும் சடங்குகளாகவும் மத ரீதியில் விளக்கங்கள் இருந்தன.
கோவிலில் உள்ள குருக்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் இதன் அர்த்தம் என்ன என்பதே தெரியவில்லை. எனவே இது ஒரு நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றே ஒரு கால கட்டத்தில் முடிவு செய்துவிட்டேன். ஆனால் கடவுளை சூரிய ஒளி வடிவில் மனத்திற்குள் வாங்கி ஜபம் செய்து பலன் பெருவது என்ற சிறிய தெளிவு எனக்குள் இருந்தது.
இருப்பினும் காயத்ரி ஜபத்தைப் பற்றி எனக்கு ஐயம் தீர்ந்த பாடில்லை. புத்தி கூர்மை எப்படிக் கிடைக்கப் பெறுகிறது என்ற ஐயம் தொடர்ந்து கொண்டிருந்தது.
ஒரு நாள், ஒளிக்கும் புத்திக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்று இணையதளத்தில் தேடுதல் மேற்கொண்டேன். இதன் மூலம் நான் தெரிந்துகொண்ட உண்மை என் ஐயப்பாட்டை நீக்கும் வண்ணம் இருந்தது.
ஓரளவு பிரகாசமான ஒளியைப் பார்க்கும் பொழுது, நமக்குள் மெலோடோனின் என்ற தூக்கத்தைக் கொடுக்கக்கூடிய ஹார்மோனின் அளவு குறைக்கப்பட்டு செரோடோனின் என்ற உற்சாகத்தைக் கொடுக்கக்கூடிய ஹார்மோனின் உற்பத்தி அதிகமாகிறது.
இந்த முறையில் தான் SAD (Seasonal Affective Disorder) என்று சொல்லப்படும் பனிக்கால மன அழுத்த நோய்குச் சிகிச்சை மேற் கொள்ளப்படுகிறது. செரோடோனின் ஹார்மோன் மன அழுத்தத்தைக் குறைப்பதாக இருந்தால், புத்தி கூர்மை அதிகரிக்கத்தானே செய்யும்.
இந்த உண்மையை உணர்ந்து, சூரிய சக்தியின் மூலம், நம் புத்திக்கூர்மையை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் செயல் விளக்கமான ஒரு மிகப் பெரிய உண்மை தான் காயத்ரி மந்திரம்.
காயத்ரி மந்திரம்
தத் சவிதூர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: பிரச்சோதயாத்


சரியான உச்சரிப்புக்கு வகைசெய்ய ஆங்கிலத்தில்
Thath Savithur Varennyam
Bhargo Thevasya Theemahee
Thiyo Yo Nah Prachothayaath
பொருள்
நம்முடைய புத்தியை ஊக்குவிக்கும், அருள்மிகு சவிதூரிலிருந்து கிடைக்கப் பெரும் ஒளியை தியானிக்கின்றோம்.
சவிதூர் என்பது சூரியனைக் கடவுளாகக் குறிக்கும் சொல்.
இந்த மந்திரம் நிகழ்காலச் செயலாக இயற்றப்பட்டிருப்பதைக் கவனிக்கவும். சூரியனுடைய ஒளியை தியானிக்கின்றோம் என்பதால் கண்களை மூடிய நிலையில் சூரிய ஒளியில் நின்று இதைச் சொல்ல வேண்டும் என்பது யதார்த்தமான விஷயம். இமைகளின் வழியே ஊடுருவிச் செல்லும் ஒளி அளவே ஹார்மோன்களைச் சமன் படுத்தப் போதுமானது.
இந்த மந்திர ஜபப் பயிற்சி யாரெல்லாம், எப்படி எத்தனை முறை செய்ய வேண்டும் என்பதை அடுத்த பதிவில் விளக்குகிறேன்,
இந்த விஷயத்தை என்னுடைய ஆங்கில வலைப் பதிவில் ஏற்கெனவே விளக்கி இருக்கிறேன்.

*********************************



Saturday, April 9, 2011

கருத்துப்பரிமாற்றம்


எந்த ஒரு விசைக்கும் சமமான எதிர்விசை இருக்கும் என்பது நியூட்டனின் மூன்றாம் இயக்கவிதி. இந்த விதிக்கு எதிராகச் செயல்பட ஒன்று இருக்கும் என்றால் அது மனிதர்களின் கருத்துப் பரிமாறிக் கொள்ளும் விதம் தான்.

எந்த ஒரு கருத்து பரிமாற்றத்திற்கும் ஒத்த கருத்தோ அல்லது எதிர்மறையான கருத்தோ அல்லது எதுவும் இல்லாமல் கூட எதிர்வினை இருக்கலாம் என்ற விதிமுறையை கருத்து பரிமாற்றத்திற்கான விதியாகக் கொள்ளலாம்.. இந்த காரணத்தால் கருத்துப்பரிமாறும் திறமை சுவாரஸ்யமான சவாலாகக்கூட இருக்கிறது. .

நீங்கள் புன்னகைத்தால் உங்களுக்கு ஒரு புன்னகை கிடைக்கலாம் அல்லது சில நேரம் நீங்கள் உன்னிப்பாக கவனிக்கப் படலாம் அல்லது
சில நேரம் கடுமையான சொற்கள் கூடக் கிடைக்கப் பெறலாம்.

ஒருவரைப் பார்த்தவுடன் அவரிடம் கை குலுக்க கையை நீட்டினால் சில நேரம் அவர் கை குலுக்கலாம் அல்லது கைகூப்பி நமஸ்காரம் செய்யலாம். யாரிடமாவது கோபப்பட்டு சத்தமாகப் பேசினால் அவரும் கத்திப் பேசலாம் அல்லது பணிந்து போகலாம்.

கருத்து பரிமாற்றம் பல காரணிகளைப் பொருத்து ஏற்படும் தூண்டுதல் உணர்வாகும். சிறந்த கருத்துப்பறிமாற்றத்திற்கு எவ்வளவோ வழிமுறைகள் சொல்லலாம். ஆனால் இவைகளைக் கடைபிடிக்க தன்னுடைய பழக்க முறைகளை மாற்றி சிறந்த வழிமுறைகள் உள்வாங்கி நடக்கின்ற மனப்பக்குவம் வேண்டும்.

ஒருவருடைய மனோநிலையைப் பொருத்தே அவருடைய சொல்லும் செயலும் விளங்கும். முதலாவதாக தன்னைப் பற்றிய விழிப்புனர்வோடு தன் உணர்வை வெளிப்படுத்துவது. அடுத்தது நோக்கத்தை மனதில்கொண்டு மற்றவரின் கவனத்தை தக்க வைத்திருப்பது..

மனித இயல்புகளைப் புரிந்து கொண்டால் தான் கருத்து பரிமாற்றம் நன்றாக இருக்கும். ஒரு கருத்தைச் சொல்ல தடங்களின்றி மொழியைப் பேசத் தெரிந்திருக்க வேண்டும். பேசும் சொற்களில் ஏற்ற இறக்கத்தையும் உடல் அசைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவை எல்லாம் சிறப்பாக அமைய வேண்டுமானால் முதலில் நாம் கேட்கும் திறன் வளர்க்கும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். நம் உள்ளத்தின் பிரதிபலிப்பை உணர்ந்த வண்ணம் கவனிப்பதே ஒரு கலை. எந்த மொழியையும் சிறந்த முறையில் பயன் படுத்த வேண்டும் என்றால் அந்த மொழிப் பேச்சை தொடர்ந்து கேட்கவும், படிக்கவும் வேண்டும்.

ஒரு மாதத்தில் ஒரு மொழியில் தேர்ச்சி பெறலாம் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை. ஒரு மாதத்தில் பல சொற்களின் அர்த்தம் புரிந்து கொள்ளலாமேயன்றி தன் கருத்தைச் சரியாக வெளிப்படுத்த அந்த மொழியைப் பயன்படுத்த முடியாது. குழந்தைகளுக்கு மிகக் குறைந்த வார்த்தைகளே தெரிந்திருந்தாலும் அவைகளால் தம்மை மிக அறுமையாக வெளிப்படுதிக்கொள்ள முடிவது அவர்களின் தேவைகள் அளவாக இருப்பதால்தான்.

மேலும் குழந்தையாய் இருக்கும் போது எதையும் உன்னிப்பாகக் கேட்கிறோம், கவனிக்கிறோம். காலப் போக்கில் நாம் வளர வளர இந்த தன்மை குறைந்து விடுகிறது. நாம் தொலைத்து விட்ட இந்த திறனை புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

பொதுவாக தகவல் பரிமாற்றம் ஒருவருடனோ அல்லது சில நேரங்களில் பலருடனோ இருக்கும். பலருடன் பரிமாறிக் கொள்வதை மேடைப் பேச்சுப் போன்றதாகக் கொள்ளலாம். முதலில் ஒருவருடன் கருத்து பரிமாற்றம் செய்வதில் தேர்ச்சி பெறவேண்டும். பிறகு தேவைக்கு ஏற்ப மேடைப் பேச்சுக்குத் தயார் படுத்திக் கொள்ளலாம். பலருடன் கருத்து பரிமாற்றம் செய்வது முக்கியமாக ஆசிரியர்களுக்குத் தேவைப்படுகிறது. ஆனால் சோகம் என்னவென்றால் பல ஆசிரியர்கள் இதை அலட்சியப்படுத்துகிறார்கள். பெரும் பாலோருக்கு புதிதாக ஒரு மொழியில் பேசவும் எழுதவும் ஆசை. ஆனால் அந்த மொழியைத் தெரிந்து கொள்வதற்கான எந்த முயற்சியையும் மேற் கொள்வதில்லை. எனக்குத் தெரிந்து ஆங்கில வழிக் கல்வியில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் பலர் இருக்கிறார்கள். ஆனால் ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் பின்தங்கியே இருக்கிறார்கள்.

திறன்கள் கற்றுக்கொள்வதில் கருத்துப் பரிமாற்றம் ஏன் கடைசி இடத்திற்குப் போகிறது என்று தெரியவில்லை. நல்ல கருத்துப் பரிமாற்றங்களினால் பல தொல்லைகளைத் தவிர்க்கலாம். தான் செய்வதே சரி என்று திருப்தியடைவதை விட்டு விட்டுப் பிறருடன் நன்முறையில் மேற் கொள்ளும் கருத்து பரிமாற்றங்களைத் தெரிந்து பழக்கிக் கொள்ள வேண்டும். நமக்குத் தெரியும் என்று நினைப்பவற்றை மிகச்சரியாக செய்ய நம்மை சீர்படுதிக்கொள்ள வேண்டும். தெரியாத சில நுட்பமான விஷயங்களை கற்றுக் கொள்ளும் மனைபாங்கு தான் இதற்கு வேண்டும்.

ஒவ்வொரு தனி மனித மனத்தில் உள்ளம், அதை சுற்றி அகங்காரமும் உள்ளத்திற்குள் உணர்வுகளும், உணர்வுகளுக்குள் ரஜோ, சத்வம் மற்றும் தாமசம் என்ற மூன்று நிலைபாட்டில் செயல்படும் விதமும் அமைந்திருக்கும். இந்த மூன்று நிலைபாடுகளும் ஒன்றோடொன்று சார்ந்து ஏழு விதமான தோற்றத்தைக் கொடுக்கும்.

1.ரஜோ என்றால் ஆதிக்க குணம்.
2.சத்வ என்றால் ஆராயும் குணம்..
3.தமோ என்றால் சோம்பேறித்தனம்.
4.ரஜோ + சத்வ
5.ரஜோ + தமோ
6.சத்வ + தமோ
7.ரஜோ + சத்வ + தமோ.

எனவே இரு தனிநபர்களுக்குள் ஏற்படும் தகவல் மற்றும் உணர்வுப் பரிமாற்றம் 49 பாதைகளில் நடக்கும் சாத்தியம் இருக்கிறது.


 

*******************************************

எந்த அளவு டாக்டர்களின் சேவையை உபயோகித்துக் கொள்ளலாம்




என்னுடைய முந்தை பதிப்பில் நம் ஆரோக்கியம் நம் கையில் என்று முடித்திருந்தேன். எப்பொழுது எந்த அளவிற்கு டாக்டர்களின் உதவியை நாடலாம் என்ற கேள்வியை இந்த முடிவானது எழுப்புகிறது.

பல நேரங்களில் நாம் நம் ஆரோக்கியத்திற்காக மருத்துவ நிபுணர்கள் என்று சொல்லப்படுகிறவர்களை சார்ந்தே இருக்கிறோம். அந்த மாதிரி தருணங்களில் சில
கீழ்வருமாறு:

  1. கிருமிகளால் வரும் காய்ச்சல், தோல் வியாதி மற்றும் கடுமையான உடல்
    வலி இருக்கும் போது.
  2. வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி.
  3. விபத்துக்களாலும் ம்ற்றும் விளையாடும் போது உண்டாகும் காயஙகளாலும்.
  4. பூச்சிகள் மற்றும் விஷ ஜந்துக்கள்.
  5. விலங்கு மற்றும் மனிதனால் தாக்கப்பட்டு காயம் ஏற்படும போது.
  6. உடலில் ஏதாவது ஒரு பகுதியில் தாங்க முடியாத வலி.
  7. அதிகளவில் உடலிலிருந்து நீர்ச்சத்து வெளியேறும் சமயங்கள்.
  8. அரை அல்லது முழு மயக்கம் ஏற்படும் போது.
  9. மது, மருந்துகளினால் ஏற்பட்ட அதிகமான தெளியாத போதை.
  10. மூச்சு விட சிரமப்படும் போது.
  11. அவசர நேரத்தில் உயிர்காயத்தல்.

நாம் அவசர சிகிச்சைக்காக ஒருவரை மருததுவமனைக்கு அழைத்துச் செல்லும் போது அங்கு முதலில் நடத்தப்படும் அவசரச் சிகிச்சை டிராமாவைப் பார்த்து பதட்டமடையக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அங்கு செய்யப்படுவது எல்லாம் நிஜமானதாகவோ அல்லது நடிப்பாகவோ கூட இருக்கலாம். இபபொழுதெல்லாம் மக்கள் இந்த மாதிரியான நடிப்புக்கெல்லாம் தங்களைப் பழக்கப்படுததிக் கொள்கிறார்கள். ஆனால் முன் அனுபவமில்லாத ஒருவர் அவசர சிகிச்சைக்காக மற்றொருவரை அழைத்துச் சென்று எவ்வளவு செலவானாலும் சமாளிக்க முடியு்ம் என்று சொல்லிவிட்டால் போதும் அந்த நோயாளியின் உறவினர்கள் ஒரு கை பார்க்கப் பட்டு விடுவார்கள். என்றாலும் வேறு வழி இல்லாத காரணத்தால் நாம் ஒத்துழைக்க வேண்டியிருக்கிறது..

அறுவை சிகிச்சை என்று வரும் போது எபபோதும் ஒன்றுக்கு இரண்டு மருத்துவர்களின் ஆலோசனை கேட்பதே சிறந்தது. என்றாலும் விபததில் பதிக்கப்பட்டவர் முடிவெடுப்பது சற்று சிரமம். அதிர்ஷ்டமில்லாமல் அடிபட்டவர் அதிர்ஷ்டததைப் பொறுததே எந்த முடிவும் அமையும்.

முடிவுரையாகச் சொ்ல்லப் போனால், மருத்துவர்களைக் கடவுளின் பிரதிநிதிகளாகக் கருதாமல் மற்ற நிபுணர்களைப் போலவே அவர்களின் யோசனைகளும் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்.

ஆரோக்கியத்தின் கடவுள்கள்




நம்மில் பெரும் பாலோருக்கு கடவுள் நம்பிக்கை மிக அதிகமாக இருக்கிறது.. இறை நம்பிக்கை நமக்கு ஒரு சுகமான உணர்வைக் கொடுக்கிறது. மனதிடத்தையும் கூட்டுகிறது.. நமக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் உடனே கடவுளிடம் பிரார்த்திக்கிறோம். நமது பிரச்சனைகளைக் கடவுள் கேட்பார் என நம்புகிறோம். பல சமயங்களில் நம் பிரச்சனை தீர்ந்து விடும். மாறாக தவறுதலாக நடந்தால் அதை நம் விதி என ஏற்றுக் கொள்கிறோம்..

இதே மாதிரியான நம்பிக்கையைத் தான் நாம் மருத்துவர்கள் மீதும் ஏற்படுத்திக் கொள்கிறோம். உடல் நிலை சரியில்லை என்றால் மருத்துவரிடம் செல்கிறோம், அவர் வார்ததைகளுக்கு அடி பணிந்து அவர் கொடுக்கும் மருந்துகளை விழுங்குகிறோம்.. நான் என் நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும், அவர்கள் உட்கொள்ளும் மருந்து பற்றி விசாரித்திருக்கிறேன். நன்றாகப் படித்தவர்களுக்குக் கூட சாதாரணமான காய்ச்சலு்க்கு அவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் பெயர் கூட அறியாதவர்களாய் இருக்கிறார்கள். மக்கள் மருத்துவர்கள் மீது அபார நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த நம்பிகையால் மருத்துவர்கள் மக்கள் உடல் நலம் காப்பதில் தாங்கள் அசாதாரண சக்தி படைத்த மனிதர்கள் போல நடந்து கொள்கிறார்கள்.

நான் வசிக்கும் இடத்தில் உள்ள மருத்துவர்கள் தங்களைப் பார்க்க வரும் நோயாளிகளை பல மணி நேரம் மற்ற நோயாளிகளோடு நோய் நொடியுள்ள சூழலில் காத்திருக்க செய்கின்றனர். நண்பர்களும் இதற்கு விதி விலக்கல்ல. எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு மருத்துவர் பிரசித்தி பெற்றிருக்கிறாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு காத்திருக்கும் நேரமும் கூடுகிறது. நான்கு மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்த கசப்பான அனுபவம் எனக்கு இருக்கிறது.

நாம் மருத்துவரின் அறையில் நுழையும் போது பல சமயயங்களில், வித்தியாசமான உடையணிந்த ஒரு நபரைப் பார்க்கலாம். அவர் தான் Medical Representative. மருத்துவர் எதிரில் அமர்ந்து கொண்டு அவர், கலர் கலரான புத்தகத்தை காண்பித்து மருத்துவரிடம் ஏதேதோ ஆங்கிலத்தில் பேசிக் கொண்டே இருப்பார். ஆனால் மருத்துவரோ இந்தக் கூத்தை எல்லாம் காது கொடுத்து கேட்பது போலவே இருக்காது.தனக்கு என்ன சாம்பிள் மருந்துகள் கிடைககும் என்பதிலேயே குறியாக இருப்பார். அந்த மருத்துவ பிரதிநிதியோ எப்படியாவது மருத்துவரை தன்னுடைய கம்பெனி மருந்துகளை எழுத வைத்தாக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருப்பவர். அந்த மருந்துகளை சாப்பிடும் நோயாளிகளோ அவை தமக்கு தேவை இல்லை என்றாலும் கூட அதிகளவில் செலவழித்து அந்த மருந்துகளை வாங்குகின்ற நி்ர்பந்தத்திற்கு தள்ளப்படுபவர்கள்.

இந்த மாதரியான வேடிக்கைக்குப் பிறகு மருத்துவர் நம்மை ஏதோ ஒருவிதமான வியக்கத்தக்க வகையில் பார்த்து சில கேள்விகளைக் கேட்பார். பிறகு அவருடைய மருந்து சீட்டில் ஏதோ மருந்துகளை எழுதுவார். அது மருந்துக் கடையில் வேலை பார்ப்ப்வருக்கு மட்டுமே புரியும். மருத்துவரும் நமக்குக் கொடுக்கின்ற மருந்து பற்றிய விவரம் ஏதும் சொல்வதில்லை. நாமும் ஏன் இவ்வளவு மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்வதே இல்லை. மருந்துகள் மீது அவ்வளவு நம்பிக்கை நமக்கு.மருந்துகள் நம்மை குணமடையச் செய்யும் என்ற நம்பிக்கை மேலோங்கிய நிலை.

மருத்துவர்கள் வெகு சில நேரங்களில் தான் நோயை குணப்படுத்துவார்கள். பல சமயங்ககளில் நோயின் தாக்கத்தை குறைப்பார்கள். ஆனால் எல்லா நேரங்களிலும் ஆறுதல் அளிப்பார்கள் என்று கி.மு.1ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹிப்போகிரேட்டஸ் என்ற மருத்துவ மேதை எழுதியிருக்கிறார். இப்பொழுதெல்லாம் மருததுவர்கள் நோயாளிக்கு ஆறதல் அளிப்பதைத் தவிர்த்து, அவரைக் குழப்பமடையச் செய்கிறார்கள். இதை எல்லாம் நாம் சரியாக புரிந்து கொண்டால் நம் ஆரோக்கியதை நாமே தக்க வைத்துக் கொள்ளலாம்.


நம் உடல் ஆரோக்கியம் மருத்துவர் கையில் இல்லை. நம் கையில் தான் இருக்கிறது என்பதை உணரவேண்டும்.. நம் வாழ்க்கை முறை, உணவு, சிந்தனை ஓட்டம், சுற்றுச் சூழல், பழக்க வழக்கங்கள், மற்றும் தாம்பத்ய வாழ்க்கை. இவை எல்லாம் தான் நம்முடைய ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றில் மாறுதல் என்றால் நம் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே நம் உடல் உறுப்புகளைப் பற்றிய அடிப்படை அறிவு வேண்டும். வலி நிவாரணி என்றால் என்ன என்றும் ஆண்ட்டிபயாடிக் என்றால் என்ன என்றும் புரிந்து கொள்ள வேண்டும். எதைச் சாப்பிட்டாலும் உடலுக்குள் ஏதோ ஒரு வினையும் எதிர்வினையும் நிகழும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுதெல்லாம் நோயாளிகளின் அறிகுறிகளைப் பொறுத்து மருத்துவர்கள் சிகிச்சையளிப்பதில்லை. ரேடியோலஜி மற்றும் லேபரட்டரிகளின் முன்னேற்றங்களால் பெரும்பாலான நோயாளிகள் scan, ECG, Blood test, Urine test மற்றும் உடல் சம்பந்தப்பட்ட இதர சில பரிசோதனைகளுக்குத் தள்ளப்படுகிறார்கள்.. முடிவில் எந்தச் சோதனையிலும் பிரச்சனை இல்லை, எல்லாம் சரியாக இருக்கிறது என்ற ரிப்போர்ட் கொடுக்கப்படும். ஆனால் முதலில் உள்ள அடறிகுறிகள் இருந்து கொண்டே இருக்கு்ம்.

நோயானது இயற்கையாக தானாக குணமாகி இருக்கும். ஆனால் பெருமையோ மருத்துவரைப் போய்ச் சேர்கிறது. பல விதமான மருத்துவப் பிரிவுகள் உள்ள பெரிய ஆஸ்பத்திரிகளில் நடக்கும் சுரண்டலுக்கு அளவே இல்லை. அங்கு பல நோய்களுக்கும் தீர்வு அறுவை சிகிச்சை தான். சாதாரணமான ஜலதோஷத்திற்கும் நிரந்தர தீர்வாக என்ன அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும் யோசிப்பார்கள் போல் இருக்கிறது. இதய நோய்ப்பிரிவு லட்சங்களைச் சுருட்டும் ஒரு வேக விளையாட்டு. பல தேவையற்ற சிகிச்சை முறைகள் செய்யப் படுகின்றன. மகப்பேறு ம்ருத்துவமும் இது போல் தான் இருக்கிறது. காலப் போக்கில் கால்நடை விலங்குகள் மற்றும் செல்லப் பிராணியான நாய்களுக்கும் சுகப்பிரசவம் என்பது இல்லாமலே போய் விடும் போல் இருக்கிறது.

நாம் ஏன் இந்த மாதிரியான வழிமுறைகளை கையாள வேண்டும்? ஒழுங்கான வாழ்க்கை முறை, நிதானமான மன நிலை, உணர்ச்சிகளை சமன் படுத்திக் கொள்ளுதல் இவை எல்லாம் இருந்தாலே நம் ஆரோக்கியத்தை நாமே தக்க வைத்துக் கொள்ளலாம்.

வாழ்க்கை திறன்களைக் கற்றுக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம் பற்றிய பிரச்சனைகளிலிருந்து நம்மைக் காத்துக் கொண்டு ஆரோக்கியக் கடவுளிடம் அடிக்கடி சென்று மாட்டிக்கொள்வதைத் தவிர்க்கலாம்.

நித்தம் ஒரு மென்திறன் பாடம், மருத்துவரை தூரத்தே நிறுத்தும்.

நாமே நம் ஆரோக்கியத்திற்குக் கடவுள்களாகலாம்.


***********************************************