மேலே வந்தவுடன்
ராஜபாளையம்வாசிகளான திரு. குமார், திரு. கணேசன் என்பவர்களின் அறிமுகம் கிடைத்திட சிறிது
நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். பிறகு முகாமில் பதிவு செய்தபொழுது வாங்கிய கண் குவளை,
மூக்குக் குவளை மற்றும் எனிமா குவளை மூன்றையும் எடுத்து சரிபார்த்துக் கொண்டேன். நாளைமுதல்
ஒவ்வொரு நாளும் முகாம் முடியும் வரை இவற்றைப் பயன் படுத்த வேண்டும். எல்லாம் சரியாக
இருக்க 10 மணிக்கு உறங்கி விட்டேன்.
காலை 5 மணிக்கு மணியோசை கேட்டுத் தூக்கம் கலைய திரு. பாலு அவர்கள் சொல்லிய
வண்ணம் முதலாவதாக தண்ணீர் ஒரு லிட்டர் அருந்திவிட்டுக் காலைக்கடன்கள் முடிக்கச் சென்றேன்.
இனிமா குவளை உபயோகிக்கச் சொல்லியிருந்தார். ஏற்கனவே அனுபவம் இருந்ததால் இதிலெல்லாம்
எந்தச் சிரமமும் இல்லை. பிறகு மூலிகைப் பல் பொடி கொண்டு பல் துலக்கிவிட்டுச் சரியாக
6.00 மணிக்குப் பயிற்சி அரங்கிற்கு சென்றேன்.
முதல் இருபது நிமிடம்
தியானப்பயிற்சி. நாம் மூச்சு விடுவதை கவனித்துக் கொண்டு இருக்க வேண்டும். அவ்வளவுதான்.அதன்
பிறகு கண் குவளை மற்றும் மூக்குக் குவளை உபயோகித்துச் சுத்தகரித்துக் கொள்ளும் பயிற்சி.
பிறகு நல்லெண்ணெயை வாயில் ஊற்றி அதிக நேரம் கொப்பளித்துத் துப்பி வாயைச் சுத்தம் செய்துகொள்ளும்
பயிற்சி. இவை எல்லாம் முடிய 7.30 மணியாகிவிட்டது.
7.30 மணிமுதல்
8.30 மணிவரை நின்ற நிலை யோகா வேகப் பயிற்சிகள். கால்முதல் கழுத்து வரையிலான எல்லா ஜாயிண்டுகளுக்கும்
பயிற்சி சொல்லிக் கொடுத்தார்கள். முடிவில் சாந்தி ஆசனமும் சொல்லிக் கொடுக்கப்பட்டது.
இரவு உணவு சுருக்கப்
பட்டதாலும், காலையில் உடல் துவாரங்கள் அனைத்தும் ஓவர்ஹாலிங் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவது
போல சிறப்பாகச் சுத்தம் செய்துகொண்டதாலும், உடற்பயிற்சியோ உடலில் ஆங்காங்கே தேங்கியிருந்த
அழுக்குகளை வெளியேற்றி உயிர் சக்தியை உடலெங்கும் சமனாகப் பரப்பிவிட்டதாலும், மனம் தியானம்
செய்தும் மற்றெந்த சிந்தனையையும் வர வழியில்லாததாலும், நான் மொத்தமாகக் காற்றில் மிதந்து
செல்வதைப்போல் காலால் நடந்து சென்றேன். முகம், கைகால் கழுவி விட்டு காலை உணவருந்தச்
செல்ல வேண்டும். வித்தியாசமான குளியல் முறை சொல்லித்தரப் போவதாய் திரு. பாலு அவர்கள்
கூறி இருந்ததால் குளியலறை சென்று குளிக்கவில்லை.
இந்த ஒரு நாள்
கற்றுக் கொண்ட சில செய்முறைகளே பல உபாதைகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள உதவும்.
எனிமா எடுத்துக் கொள்ளுதல் மலச் சிக்கலுக்கு ஒரு எளிய தீர்வு.எந்த ஒரு மருந்தும் தேவையில்லை.
ஆனாலும் தினமும் எடுத்துக் கொள்வது முறையல்ல. அப்படி செய்தால் நம் உடம்பு மலம் கழிக்கும்
விதத்தை வேறுமாதிரி மாற்றிக் கொள்ளும்.
நம்முடைய வாழ்கை
முறையில் உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்டதால் தினமும் உடற்பயிற்சி அவசியமாகிப்
போய்விட்டது. ஒருவரின் பணி ஒரே இடத்தில் உட்காராமல் உடல் உழைப்பு சார்ந்ததாகவே இருந்தாலும்
சில உறுப்புகள் அதிகமாகவும், சில உறுப்புகள் குறைவாகவும் செயல் படும் வண்ணம் தான் பணிகள்
அமையும். எனவே உடற்பயிற்சி தவிர்க்க முடியாத ஒன்று.
தியான முறைகளில்
பல நிலைகள் உணர முடியும். மனத்தை உணரும் வரை பயிற்சி இருந்தால் போதும் என்பது என் கருத்து.
மனத்திற்குள் உள் நோக்கி பயணித்தால் மனம் பல மாய இடங்களுக்குச் சென்று பல மாய அனுபவங்களைப்
பெற்றுக்களிக்கும். இவற்றைத் தவிர்க்க எதாவது ஒரு பொருளையோ பெயரையோ தியானிக்க முயன்றால்,
நிஜ வாழ்வில் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதை விரும்ப ஆரம்பிக்கும்.
பிரச்சனைகளின் உண்மைப் பின்னணியை புரிந்துகொள்வதுதான் வாழ்வதற்கான வழி என்ற கருத்து
எனக்கு உண்டு. வாழ்வை துறக்க முடிவு செய்பவர்கள் மனதில் உள் நோக்கிப் பயணிக்கலாம்.
உடலைகடந்த பேரின்பத்தை மனம் கொடுக்கும். ஆனலும் அதுவும் ஒரு மாயையே.!!
இத்தகைய எண்ணங்களுடன் காலை உணவருந்தச் சென்றேன். அங்கே
மீண்டும் ஒரு ஷாக் காத்திருந்தது!!!!
தொடரும்....
4 comments:
மீண்டும் ஒரு ஷாக் காத்திருந்தது!!!! i am waiting
உங்களின் வரவிற்கும், ஆர்வத்திற்கும் நன்றி குணா அவர்களே.
Thank you for your Effort Sir :)
Post a Comment