Sunday, October 11, 2015

மருத்துவத்தால் நோயற்ற வாழ்வா ?


முன்னாளில் மருத்துவமனை என்று சொல்லப்பட்ட இடங்கள் எல்லாம் இப்பொழுது ஆரோக்கிய காப்பகங்கள் என்று புதுப் பெயர் தரித்து மிகப்பெரிய வளாகங்களாக உருவெடுத்து வருகின்றன. நோய் இல்லாதவர்களைக் கூட இந்த இடங்களுக்கு வரவழைக்க புதுப்புது யுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன. இந்தக் காப்பகங்களின் சேவையை சந்தைப் படுத்த இந்த அமைப்புகளில் மார்கெடிங் பிரிவுகள் அயராது பாடுபடுகின்றன. செய்தித்தாள்களிலும், பத்திரிகைகளிலும் மற்றும் தொலைக்காட்சியிலும் வண்ண வண்ண விளம்பரங்கள் மூலம் இந்தச் சந்தை படுத்தும் பணி வெகு சிறப்பாக நடந்து வருகிறது.

நம்முடைய வாழ்க்கை முறையும் முன்பு போல இல்லவே இல்லை. உணவு பற்றிய நுண்ணறிவை நாம் இழந்து கொண்டு வருகிறோம். ஒரு வாரத்தில் என்ன எல்லாம் சாப்பிட்டால் நம்முடைய ஜீரண உறுப்புக்களால் சமாளிக்க முடியும் என்று நாம் அறிய முற்படுவதில்லை.

நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிழமைவாரியாக என்னென்ன காய்கறிகள், குழம்பு வகைகள் மற்றும்  உணவுவகைகள் செய்ய வேண்டும். எந்தக் காய்க்கு எந்தக் காய்  ஒவ்வாது என்ற முறைகளை அக்கால பாட்டிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். வெள்ளைச் சக்கரை மிக அளவாகப் பயன் படுத்தப்பட்ட காலம். ஆலையில் தீட்டப்பட்ட அரிசி நடைமுறைக்கு வந்து கொண்டிருந்தது. சாமை, குதிரைவாலி, வரகரிசி, தினை போன்ற சிறுதானியங்கள் புழக்கத்திலிருந்து மறைந்திருந்தன. கோதுமையும், கேழ்வரகும் பயன்பாட்டிலிருந்தன. பச்சைக் கேழ்வரகை கைகளால் உதிர்த்து வாயில்போட்டு மென்று பாலாய் சுவைத்த ஞாபகம் எனக்கிருக்கிறது. ஆரோக்கியபானங்கள் பற்றிக் கேள்விப்பட்டதுகூட இல்லை. இருந்தாலும் மக்கள்  உயரமாகவும் நல்ல திடகாத்திரமாகவும் இருந்தார்கள்.

இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு முறையும் நான் ஓட்டல்களுக்குச் செல்லும் போதும் ,அங்கு மக்கள் எப்படியெல்லாம் சாப்பிடுகிறார்கள் என்று பார்க்கிறேன். சில பேர் சாப்பிடும் வித விதமான  உணவு வகைகளைப் பார்த்தால், எப்படி இவர்களால் இவ்வளவு உணவையும் சாப்பிட முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது. நாடு செழிப்பாக உள்ளது. மக்களுக்கு வயிறு முட்டச் சாப்பிட உணவு கிடைக்கின்றது. வசதியும் இருக்கிறது ஆனால் உடம்பு ஏற்றுக் கொள்ளும் படியாக இருக்கிறதா?

உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வு இருப்பது போலத் தெரிந்தாலும், வெகு சிலர் மட்டும் உடற்பயிற்சி செய்கிறார்கள். சிலர் நடைப்பயிற்சி செய்கிறார்கள். மற்றவர்கள் எதையும் கண்டு கொள்ளாமல் நன்றாகச் சாப்பிட, வேலைக்குப் போக என்ற படிக்கு அன்றாட வாழ்க்கையைக் கடத்துகிறார்கள்.

ரொம்பவும் நெருக்கமானவர்கள் ஊருக்குப் போக விடைபெறும் பொழுது, உடம்பை நன்றாகப் பார்த்துக் கொள்ளுமாறும் சொல்லி அனுப்புவோம். ஆனால் உடம்பை மட்டும் நம்மால் நன்றாக பார்த்துக் கொள்ள முடிவதேயில்லை.

நம்முடைய கல்விக்கூடங்கள் உடம்பைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதை ஒரு பொருட்டாகக் கொள்வதில்லை. படிப்பு, இஞ்சினியரிங், மெடிக்கல் சீட் அதற்கப்புரம் பெரிய நிறுவனத்தில் வேலை என்று இளைஞர்களின் ஆழ்மனத்தில் பதிய வைத்து அந்தத் திசையிலே அவர்களை கிறுக்குப் பிடித்தது போல் செயல்பட வைக்கிறார்கள். இதற்கு ஒவ்வொரு பெற்றோரும் பெறும் பங்கு வகிக்கிறார்கள். இங்கொன்றும் அங்கொன்றுமாக யாராவது குழந்தைகளின் முழுமையான நலம் பற்றி எழுப்பும் சிறிய ஓசை ஈனமான முனகலாகக் கேட்டு அடங்கிவிடுகிறது. நமது கல்வி வியாபாரிகளின் வியாபாரம் இத்தகு மாயையால் செழிப்பாக வளர்கிறது. நமது சந்ததியினர் பணக்கார நோயாளிகளாய் உருவாக்கப் படுகிறார்கள்.

பிறகென்ன ஆஸ்பத்திரிகள் தங்கள் பெயர்களை ஆரோக்கியக் காப்பகங்கள் என்று மாற்றிக் கொண்டு ஆடு நனையப் பார்த்து ஓநாய் அழுத கதையாய் மிகுந்த அக்கரை உடையவர்களாய்க் காட்டிக் கொண்டு வியாபாரத்தைச் சிறப்பாகச் செய்கிறார்கள். இந்த நிலை இந்தியாவிற்கு மட்டும் பொருந்தும் என்று தப்புக் கணக்குப் போட்டுவிட வேண்டாம். இந்தத் திட்டமே வளர்ந்த நாடுகளில் வகுக்கப்பட்டு வளரும் நாடுகளிலும் சிறப்பாக அரசுகளின் ஆதரவுடன் அரங்கேறி வரும் திட்டம்.

பல நூற்றாண்டுகளாய் நம் முன்னோர்கள் ஆராய்ந்து அறிந்த பலவகையான மூலிகை மற்றும் ஆயுர்வேத சித்த மருத்துவத்தை தொன்னூறு வருட பிரிட்டிஷ் ஆட்சி அழிக்க முற்பட்டிருக்க வேண்டும். மருத்துவம் என்று கல்லூரிகளில் சொல்லிக் கொடுத்தது எல்லாம் ஆங்கில மருத்துவம். வைத்தியரைக் காட்டிலும் டாக்டர் உயர்ந்தவர் என்ற மாயை உருவாக்கப்பட்டது. அறுவை சிகிச்சையின்பால் மக்களுக்கு உள்ள பயத்தைப் போக்க அவ்வப்பொழுது சுஸ்ருதாவை மட்டும் நினைவுகூர்ந்தார்கள் போலும்.

எப்படி நம் வாழ்க்கையில் ஆங்கில மருத்துவம் முக்கியமடைந்தது என்பது ஒருபுறமிருக்க இன்றைய நிலையில் ஆங்கில மருத்துவர்கள் ஆரோக்கிய காப்பாளர்கள் என்ற அந்தஸ்தைப் பெற்று விட்டார்கள்.

இந்தநிலையில் இவர்களின் செயல்பாடுகளும் எப்படி  இருக்கின்றன என்று பார்ப்போமானால், சுத்தியல் எடுத்தவன் கை ஆணியைதேடி அலையுமாம் என்ற புதுமொழிக்கு ஏற்ப காய்ச்சல் சளி என்று போனால்கூட பலவித ரத்தப் பரிசோதனை, ஸ்கேன்,எக்ஸ்ரே என்று பரிந்துரை செய்கிறார்கள். அதற்காக நமது மனமும் பக்குவமடைந்துவிட்டது. இதெல்லாம் செய்யவில்லை என்றால் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நாம் சரியான மருத்துவரைப் பார்க்கவில்லை என்று அங்கலாய்க்க நம்முடைய ஆரோக்கியம் குறித்த தன்நம்பிக்கை தூள் தூளாகி இவர்களின் ஆராய்ச்சிக் கூடங்களுக்கு சுண்டெலிகள் ஆவதற்கு நாம் ஒத்துக் கொண்டு விடுகிறோம்.

பரிசோதனக்கூடங்களும், மருந்துக் கடைகளும் மருந்துக் கம்பெனிகளும் தத்தம் தொழில் சிறக்க என்னென்ன யுக்திகளைக் கையாள முடியுமோ அதையெல்லாம் செய்கிறார்கள். கிட்டத்தட்ட 25 வருடம் சந்தைப் படுத்தும் தொழிலில் அனுபவம் இருக்கும் எனக்கு, சந்தையில் போட்டிப் போடுவதென்றால் கார்பரேட் நிறுவனங்களும், ஏன், சில சிறுதொழில் நிறுவனங்களும் என்னவெல்லாம் சித்து வேலைசெய்வார்கள், அவற்றை நியாயப் படுத்துவார்கள் என்று யூகிக்க முடியும்.

கிளினிக்கல் லேப்களில் கொடுக்கப்படும் ரிப்போர்ட்டுகளை நீங்கள் அறிந்த அளவில்  படித்தால் உங்களுக்குப் பயம் ஏற்படும். ஒவ்வொரு ரிஸல்ட்டும் எந்த அளவு இருக்கலாம் என்று ரிப்போர்டின் பின் புறமோ அல்லது அதற்குப் பக்கத்திலோ அளவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுடைய ரிஸல்ட்டும் , நார்மல் என்று போடப்பட்டிருக்கும் அளவையும் ஒப்பிட்டால் பல நேரம் வயிற்றில் புளியைக்கரைக்கும். பிறகு வேறு வழியே இல்லை. அல்லோபதி மருத்துவத்தைத்தான் உங்களைச் சுற்றியுள்ள அத்தினை பேரும் பரிந்துரைப்பார்கள்.

இன்றைய வாழ்கைமுறையும் நம்மைச் சூழ்ந்திருக்கும் தகவல்களும், நம்மை இயல்பாகவே ஆரோக்கியக் காப்பகங்களின் பிடியில் சிக்கவைத்து விடுகின்றன. சிக்கிவிட்டால் நம் சேமிப்பில் கணிசமான அளவை நாம் யதார்த்தமாக இழந்து அதுகுறித்து பதார்த்தமாக பெருமை பேசி செய்த தவறைச் சரியென நிருபிக்க முற்படுவோம். இந்தக் கலாச்சாரம் ஆஸ்பத்திரிகளின் வியாபார விருத்திக்கு பெரிதும் பயன்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் மருத்துவம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் அபாரவளர்ச்சி அடைந்திருப்பதே இதற்குச் சான்று.

இது குறித்த விளிப்புணர்வை கொஞ்சமாவது நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாமா? சில விஷயங்களை மற்றி யோசிக்கக் கற்றுக்கொள்வோம்..

1.   ஆரோக்கிய காப்பகங்கள் உங்களுக்கு இருக்கும் நோய் பற்றி சொல்லி மிரட்டுவதில் முழுவதும் உண்மையில்லை. அங்கே உங்களிடம் கலந்தாலோசிப்பவர் (கௌன்சிலர்) டாக்டர் அல்லாதவராகக் கூட  இருக்கலாம். அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தவிதத்தில் அவர்கள் பேசி உங்களை அவர்களுடைய வாடிக்கையாளர்களாய் தக்கவைக்க முயலுவார்கள்

2.   அவர்கள் உருவாக்கும் அவசர சிகிச்சை நிலையை நம்மால் சரியா தவறா என்று தீர்மானிக்க முடியாது. முடிந்தவரை சில நோய்களைப் பற்றியாவது வலைத்தளத்தின் வாயிலாக தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

3.   உணவில் பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகளை சேர்ப்பதைக் குறைக்க, முடிந்தால் தவிர்க்கவும் வேண்டும். இதில் ஜீனி, மாவுவகைகள், மதுபானங்கள், குளிர்பானங்கள், ஆரோக்கிய பானங்கள், பிஸ்கட்வகைகள் எல்லாம் அடங்கும். பல பேர்களின் ஒருநாளின் முதல் உணவே பிஸ்கட் என்பது ஒரு வருத்தமான நிலை. இதையெல்லாம் தவிர்த்து என்ன சாதிக்கப் போகிறோம் என்ற கேள்வி எழும். இவையெல்லாம் தவிர்க்கும் மனநிலை வந்துவிட்டால் நாம் செய்து மகிழ எத்தனையோ விஷயங்கள் இருப்பது நமக்குப் புலப்படும்.

4.   கொஞ்சமே கொஞ்சம் யோகாவைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். கண்ட கண்ட சாமியார்களின் மிரட்டல்களுக்குச் செவிசாய்க்க வேண்டாம். பெரிய யோகா மையங்களையும் தேடி அலைய வேண்டாம். நம் உடம்பிற்கு அன்றாடத் தேவைக்கு வேண்டிய ஆசனங்கள் மற்றும் மூச்சுப்பயிற்சிகள் சுலபமாகக் கற்றுக் கொள்ள எண்ணற்ற இடங்கள் இந்தியா முழுவதும் பரவிக்கிடப்பது நாம் செய்த பாக்கியம்.

5.   நடைப்பயிற்சி ஒன்றே போதும் என்று நினைக்க வேண்டாம். அதிகமான எடையை குறைக்க, சக்கரை அளவைக் கட்டுப் படுத்த நடைப்பயிற்சியால் முடியும் என்றாலும் மூட்டுவலிவருவதற்கு எல்லாச் சாத்தியமும் உண்டு. எல்லாத் தசைகளும் பயிற்சி அடையாது. உள்ளுறுப்புக்களுக்கு குறைந்த நன்மையே ஏற்படும்.

6.   டிரெட் மில் மற்றும் தொலைகட்சியில் விளம்பரப் படுத்தும் வயிறு குறைக்கும் மிஷின் போன்றவற்றை வாங்கிச் சிரமப்பட வேண்டாம்.

7.   இருசக்கர வாகனங்களை அளவாகப் பயன் படுத்துங்கள். நெடுந்தூரப் பயணங்களில் பஸ்ஸில், கார்களில் முடிந்த மட்டும் கண்ணாடிகளை மூடிவைத்துக்கொள்ளவும்.

8.   நேரத்திற்குச் சாப்பிடக் கற்றுக்கொள்ளவும். வயிறுமுட்ட சாப்பிடுவதை பழக்கமாகக் கொள்ள வேண்டாம். சாப்பிடும் போது தண்ணீர் அருந்தக் கூடாது. சப்பிட்டுமுடிந்து அரைமணிநேரம் கழித்துத் தண்ணீர் குடிக்கலாம்.உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

9.   நல்ல வெயிலிலும், சாப்பிட்ட உடனேயும் ஐஸ்கிரீம், குளிர்பானம் சாப்பிடக்கூடாது. ஐஸ்கிரீம் சாப்பிட ஏற்ற நேரம் சில்லென்ற மாலைப் பொழுது. குளிர் பிரதேசங்களில் ஐஸ்கிரீம் சுவைத்து மகிழுங்கள். குளிர்பானங்களால் சாப்பிடும் பொழுது சுகமும் அதன் பிறகு அவஸ்தையும் உணரலாம்.

10. பாலை மோராக்கிச் சாப்பிடுவது 40 வயதைக் கடந்தவர்களுக்குச் சிறந்தது. ஓரிரு டம்ளர் பால் இளம்வயதினர்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தாது. பால் இன்றியமையாத உணவா என்று இன்னும் முடிவாகவில்லை.

11. உணவில் காய்கறிகளை அதிகமாகவும், தானியங்கள் குறைவாகவும் இருத்தல் நலம். அசைவம் சிறு அளவே போதும். ஒருவர் ஒரு முழுக்கோழியைச் சாப்பிடுவது போன்ற அபத்த ஆசைகளுக்கு ஆளாக வேண்டாம். எல்லாப் பழங்களையும், குறிப்பாக ஆப்பிள் பழங்களைத் தோல் நீக்கிச் சாப்பிடுவோம். ஆப்பிள் மீதுகுற்றமில்லை. காலம் செய்த கோலம். மனிதன் செய்த குற்றம்.

12. கொடூரமில்லாமல் அன்பான அற்பணிப்புடன் கூடிய வாழ்க்கையைப் பழகுங்கள். இதற்குத் தொலைக்காட்சித் தொடர்களையும் அநேகமான படங்களையும் தவிர்க்க வேண்டியிருக்கும். மனதளவில் மாசு இல்லாமல் ஆவதற்கு வேறுவழியில்லை. மன இறுக்கம் நோய்க்கு வழிவகுக்கும்.  

13. இத்தனையும் செய்தாலும் துரதிஷ்டவசமாக நாம் நோய்வாய்ப்பட வாய்ப்புகள் உண்டு. அப்பொழுது கிருமிகளால் ஏற்படும் நோய்களுக்கும், விபத்துகளால் ஏற்படும் காயங்களுக்கும் அல்லோபதிமருத்துவம் தான் சாலச் சிறந்தது. மற்ற நோய்களுக்கு மாற்று மருத்துவம் செய்துபார்க்கலாம். குணம் ஆகும் அறிகுறிகள் இல்லையென்றால் அல்லோபதி மருத்துவத்திற்கு சரணடைவதைத்தவிர வேறுவழியில்லை. அவ்வாறாக அல்லோபதி மருத்துவம் செய்துகொள்ளும் போது நோய்பற்றியும் எந்த மருந்தினால் எப்படி மருத்துவம் செய்யப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய சின்ன அனுபவத்திலேயே சிறந்த டாக்டர்கள் கூட ஓரிருமுறை தவறான மருந்துகளைப் பரிந்துரைத்ததைப் பார்த்திருக்கிறேன்.

14. எல்லா மருந்துகளுக்கும், ஆயுர்வேதம், ஹோமியோபதி உட்பட  எதிர்விளைவு (ADVERSE EFFECT) இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

15. உடற்பயிற்சிகளின் எதிர்விளைவுகள்தான் நோயிலிருந்து நம்மைக் காப்பாற்றுகின்றன என்பதையும் உணர வேண்டும்.



வாழ்க நலமுடன்

No comments:

Post a Comment