Sunday, August 2, 2015

இயற்கை நல வாழ்வு முகாம்.—பகுதி 1


இந்தப் பதிவை நான் வலைதளத்தில் பிரசுரிக்கும் இன்று, இந்த முகாமில் நான் கலந்து கொண்டு ஓராண்டு முடித்துவிட்டது. நல்ல விஷயங்களை உடனே பகிர்ந்து கொள்ள ஆசைப்படுவேன். அந்தவகையில் இந்த முகாம் பற்றியப் பதிவை என்னுடைய ஆங்கில வலைதளத்தில் இட்டேன். அதை அனேகம் பேர் படித்தார்களா என்பது தெரியவில்லை. அதிகமான பின்னூட்டங்கள் வரவில்லை என்பதால் தமிழ்ப் பதிவை உருவாக்குவதில் அத்தனை ஆர்வம் காட்டவில்லை. ஒருவருடம் கழித்து சென்றமாதம் இந்த முகாமில் பின்னர் கலந்து கொண்ட அன்பர் விஜய் கார்திக் என்பவர் ஆங்கிலப் பதிவைப் படித்துவிட்டு, இந்தப் பதிவு தமிழில் வெளிவர ஊக்கமளித்தார்.

அரவிந்த் இயற்க்கை நலவாழ்வு மையம், ராஜபாளையம் நடத்திவரும் மூன்று நாள் முகாம் ஆகஸ்ட் 6, 2014 முதல் துவங்க இருந்தது. தொலைபேசிமூலம் முன் தினம் முற்பதிவை உறுதி செய்து கொண்டிருந்தேன். மதியம் 1.00 மணியளவில் பஸ் பிடித்து கிளம்புவதாக உத்தேசம். மூன்று நாட்களுக்கு ஆபீசைத் தொடர்பு கொள்ள முடியாது என்பதால் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து ஆபீசைவிட்டு கிளம்பும் போது மதியம் மணி 2.00. வீட்டிற்குச் சென்று அவசர அவசரமாக அவரைக்காய் கூட்டு மற்றும் புளிக்குழம்பு சாதம் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு அரக்கப் பரக்க ஓடி ராஜபாளையம் அரவிந்த் ஆஷ்ரமத்திற்குப் போய் சேரும் பொழுது மணி மாலை 5.05.

முகாமிற்கு பதிவு நடை பெற்ற இடத்தில் ஒரு விண்ணப்பப் படிவம் பூர்த்திசெய்து கொடுத்தேன். உயரம் 170 செ.மீ, எடை 83 கிலோ என்பது இந்தப் பதிவிற்கு அவசியமான என்னைப் பற்றிய விபரங்கள்.

செல்போன், ரொக்கப்பணம், பிரஸ், பேஸ்ட், சோப்,ரேசர் முதலிய பொருட்களைக் கொண்ட ட்ராவல்கிட் அத்தனையும் என்னிடமிருந்து வாங்கிக்கொள்ளப்பட்டது. ரொக்கம் கணக்குப் பார்த்து ஒரு காகிதத்தில் எழுதி என் கையொப்பத்துடன் வாங்கிக் கொள்ளப்பட்டது. செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்து கொடுக்கச் சொன்னார்கள். எல்லாவற்றையும் ஒரு பையில் போட்டு பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்டார்கள். போகும் பொழுது சரிபார்த்து வாங்கிக் கொள்ளும் படி சொன்னார்கள்.

அந்தக் கணம் எனக்குத்தெரிந்த அத்தனை உறவினர்கள், நண்பர்கள் மற்றும்  என்னைக் கொஞ்சமே கொஞ்சம் அறிந்தவர்களுடன் இருந்த அத்தனை தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன. கையில் வேறு சல்லிக் காசு கூட இல்லை. பசியோ கிரங்கடித்துக் கொண்டிருந்தது.

முகாமில் கலந்து கொள்ளும்  ஆண்களுக்கு மாடியில் ஒரு பெரிய ஹாலில் தங்குமிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. சன்னலை ஒட்டிய  பாய் ஒன்றில் என்னுடைய பையை வைத்துக் கொண்டேன். தண்ணீரைத் தவிர வேறெந்த உணவுப் பொருளும் இல்லை. தங்குமிடம் சுத்தமாக இருந்தது. ஒரு பக்கத்தில் வரிசையாக சுத்தமான குளியல் அறை வசதிகள் இருந்தன.

கைகால் முகம் கழுவிவிட்டு அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தேன். அந்த இடம் ஐய்யனார் அருவி சமீபத்தில் ஒரு மலைத்தொடரின் அருகிலே அமைந்திருக்கின்றது. சிறந்த இயற்கைச் சூழல். வெப்பம் அதிகமாக இல்லை. பறவைகள் ஒலி தவிர எந்தச் சத்தமும் இல்லை. உடன் கலந்து கொள்கின்றவர்களின் பேச்சுச் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. நண்பர்களுடன் வந்தவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு இனிதான் நண்பர்கள் கிடைப்பார்கள்.

அனேகமாக எல்லோருக்கும் பாய்களில் படுக்க தங்கள் இடங்களை தேர்ந்தெடுதுக்கொண்டார்கள். முடியாதவர்களுக்குச் சில கட்டில்களும் இருந்தன. இரவு 7.45 மணிவரை ஆட்கள் வந்த வண்ணம் இருந்தார்கள்.
இரவு 8.00 மணிக்கு ஒரு மணி ஓசை கேட்டது. கீழேவரச்சொல்லி அழைப்பு. இரவு உணவிற்காக இரண்டே இரண்டு வாழைப்பழங்கள். மனதில் பக்கென்றிருந்தது. யானைப் பசிக்கு சோளப்பொரியா ???
ஒவ்வொருவரின் முகத்தைப் பார்க்கத் தமாஷாய் இருந்தது. என் முகம் எப்படி இருந்தது என்று பார்க்க கண்ணாடி இல்லை.

அடுத்த நாள் குறித்த விளக்க உரைக்காக எல்லோரையும் கீழேயுள்ள ஹாலில் சென்றமரும்படி சொன்னார்கள். ஆண்கள் 34 பேர், பெண்களும் அதே எண்ணிக்கையில் அந்த முகாமிற்கு வந்திருந்தார்கள்.
திரு. பாலசுப்பிரமணியன் என்பவர் இந்த முகாமைப் பற்றியும் அதன் அவசியத்தைப் பற்றியும் ஒரு சிற்றுரை நிகழ்த்தினார். எல்லோரையும் 10.00 மணிக்குப் படுத்துத் தூங்கி காலை 5.00 மணிக்கு எழுந்து விட வேண்டும் என்று கூறினார்.

இரண்டு வாழைப்பழம் இரவு உணவு, 10.00 மணிக்குத் தூங்கிவிட வேண்டுமாம், காலை 5.00 மணிக்கு எழுந்து விட வேண்டுமாம். என்னடா மதுரைக்காரனுக்கு வந்த சோதனை! என்று எண்ணிக்கொண்டு மேலே சென்றுவிட்டேன்.   

தொடரும்…

2 comments:

Unknown said...

என் கோரிக்கையை ஏற்று தமிழில் உங்கள் அனுபவத்தை எழுத முன்வந்ததற்கு நன்றி. இது என்னைப் போன்று பலருக்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்கின்றேன்

S.Venkatachalapathy said...

திரு.விஜய் கார்த்திகேயன்,
தங்கள் வருகைக்கும் ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Post a Comment