Sunday, September 13, 2015

இயற்கை நல வாழ்வு முகாம்.—பகுதி 7- இறுதிப்பகுதி.

இயற்கை மருத்துவத்தின் படி அநேக நோய்களுக்கான அடிப்படைக் காரணம் உடலில் சேரும் கசடுகளும், நோய்கிருமியைஎதிர்க்கும் சக்தி குறைதலும் தான். தினம் தினம் உடலையும் மனதையும் நன்றாகப் பராமரித்து உடலுக்கு ஏற்றஉணவுகளைச் சரியான நேரத்தில் சரியான அளவில் சரியான முறையில் உட்கொண்டோமானால் நோய்வாய்ப்படுவதுகுறைந்து போகும்.

காலையில் வெறும் வயிற்றில் 750 மிலி முதல்1 லிட்டர் வரை குளிர்ந்த நீர் அருந்தும் பழக்கம் ஜீரண உறுப்புக்களையும், சிறுநீரகத்தையும் சுத்திகரிக் பெரிதும் உதவும். மலச்சிக்கல் வராமல் தடுக்கும். இந்த எளியப் பழக்கம் அநேகமானநோய்களிலிருந்து நம்மைக் காக்கும்.

குறைந்தது 6 சுற்றுச் சூரிய நமஸ்காரமும், ஒரு சில யோகாசனப் பயிற்சியும் பல உடல் உபாதைகளிலிருந்து நம்மைக்காக்கும். இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க, தொலைக்காட்சி, வாட்ஸ்அப் மற்றும் முகநூல் பிரவேஷம் முதலியவற்றைத் தியாகம் செய்ய வேண்டியதிருக்கும்.

சாப்பிடும் பொழுது தண்ணீர் அருந்தக் கூடாது. சப்பிட்டு முடித்து அரை மணி நேரம்கழித்து தண்ணீர் குடிக்கலாம். சாப்பிட்டஉடன் குளிர்பானம், ஐஸ்கிரீம் போன்ற மிகவும் குளிரூட்டப்பட்டவற்றை சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள்தோன்றலாம். கேஸ் நிரப்பப்பட்ட குளிர்பானங்கள் ஜீரணக் கோளாறுகள் ஏற்படுத்தும். இதெல்லாம் கடைப்பிடித்தும் நோய் வந்தால் பின்வரும் முறைகளைக் கையாண்டு குணமடையலாம்.

அல்சர்: வெண்பூசனி பச்சையாகவோ தயிருடன் சேர்த்தோ சாப்பிட குணமாகும்.

இரத்த மூலம்: குப்பைமேனி இலையை அரைத்துப் பாலில் கலந்து சாப்பிட குணமாகும்

மூட்டுவலி: விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய், கடுகெண்ணெய்,புங்க எண்ணெய் ஐந்தையும்சரிவிகிதத்தில் கலந்து இரவில் படுக்கும் முன் வலி இருக்கும் இடத்தில் தடவிக்கொண்டு படுத்தால் குணமாகும்.

சாதாரணக் காய்ச்சல்: எந்த மருந்தும் தேவையில்லை. எனிமா எடுத்துக் கொண்டு, உண்ணா நோன்பு இருந்து படுத்துக்கொண்டு ஓய்வில் இருக்கக் காய்ச்சல் குணமாகுமாம்.

இரவில் வரும் வறட்டு இருமல்: மிளகுடன் தேன் கலந்து சாப்பிடக் கட்டுப்படும்.

இவ்வாறாக வீட்டிலேயே இருக்கும் எளிய மருந்துகள் பற்றி ஒரு சிற்றுரை நிகழ்த்தப் பட்டது. இதையெல்லாம் கேட்டுவிட்டுஎனக்குள் ஒரு கேள்வி எழுந்த வண்ணம் இருந்தது. இதையெல்லாம் வீட்டில் வைத்துச் செய்ய முடியுமா என்பதுதான்அந்தக் கேள்வி. பன்முனைத் தாக்குதலுக்கு ஆளாகி ஃபேமிலி டாக்டர் என்று சொல்லப்படுகின்ற ஒருவரிடம் உடனேபோக வேண்டியிருக்கும்.

ஆனாலும் மூலிகை மருத்துவம் முடிந்த மட்டும் செய்து கொள்ளலாம். இதை இங்கே குறிப்பிடும் போது அரளி விதை,புகையிலை போன்ற இன்னும் பல விஷமூலிகைச் செடிகள் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். மூலிகைமருந்துகளுக்கு சைட் எஃபெக்ட்ஸ் இல்லை என்ற கூற்றை நான் ஒப்புக் கொள்ளவில்லை. எல்லா உணவுகளுக்கும், எல்லாமருந்துகளுக்கு நேர்வினை, எதிர்வினை இரண்டுமே இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

உண்ணா நோன்பு முடிந்த இரண்டாம் நாள் இரவு உணவாக இரண்டு நாட்டு வாழைப் பழங்கள் கொடுக்கப்பட்டன. அடுத்தநாள் காலையில் 5 மணிக்கு எழுந்து காலைக்கடன்கள் முடித்த பின் தியானம். அதற்குப்பின் உடற்பயிற்சி, மற்றும் பிராணயாமம் சொல்லிக் கொடுத்தார்கள். 9.00 மணிக்கு ஊறவைத்த கடலை, இரண்டு வாழைப்பழம் மற்றும் ½ டம்ப்ளர் நெல்லிக்காய் சாறு கொடுக்கப் பட்டது. வாழையிலைக் கிடைக்காததால் வாழையிலைக் குளியல் மேற்கொள்ளும் வாய்ப்புஅமையவில்லை. எனவே குளியலறையில் குளித்துவிட்டு நாங்கள் ஒப்படைத்த சாமான்களைப் பெற்றுக் கொண்டு மதியஉணவாக வாழைப்பழம், அவல் மற்றும் பேரீச்சம்பழம் கலந்த களி, பப்பாளி ¼ பழம், சப்போட்டா இரண்டு, சீவிய கேரட் ஒரு கரண்டி எல்லாம் கொடுக்கப்பட்டது. வயிற்றுக்குப் போதுமானதாக இருக்க உணவு உண்டபின் ஊருக்கு கிளம்பத்தயாரானோம். முகாம் இலவசம் தான் என்றாலும் நன்கொடை கொடுக்கலாம் என்று கூறினார்கள். இத்தகைய சிறப்பானமுகாம் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள் கூறி என்னுடைய திருப்திக்காக நன்கொடையும்அளித்துவிட்டுக் கிளம்பினேன்.

நண்பர் குமார் அவர்கள் தம்முடைய காரிலே என்னை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார். நல்ல வெயில். செங்கோட்டைமதுரை பேசஞ்சர் ரயில் அரைமணி நேரம் கால தாமதமாக வந்தது. ரயிலில் ஏறியவுடன் கண்ட காட்சிகள் மனத்தைஉறுத்தியது. சிறுவனொருவன் பிளாஸ்டிக் டிபன் பாஃக்ஸைத் திறந்து நூடுல்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனுடையதாயாரோ பச்சைப் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட கேஸ் பொங்கும் குளிர்பானம் அருந்திக் கொண்டிருந்தார்.பயணிகள் வழி நெடுக்க சமோஸா வெள்ளரிப் பிஞ்சு, கடலைமிட்டாய் என்று எதையாவது தின்று கொண்டே பயணம்செய்கிறார்கள். உணவுப்பழக்கம் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டது என்று பட்டது.

மருத்துவர்கள் செல்வச் செழிப்போடு வாழ்வாங்கு வாழ இந்தச் சமுதாயம் தயாராகிவிட்டதை உணரமுடிந்தது. கோடிகொடுத்தும் மருத்துவப் பட்டம் வாங்க ஒரு கூட்டம் ஏன் அலைமோதிக் கொண்டிருக்கிறது என்ற கேள்விக்குப் பதில்கிடைத்தது.

முற்றும்

4 comments:

S.Venkatachalapathy said...

இதிலும் சில முக்கிய ஹெல்த் டிப்ஸ். எளிதில் கடைபிடிக்கலாம்.எல்லாப் பகுதியும் படித்துவிட்டு மூன்று நாள் முகாமிற்கு சென்று வாருங்கள். மூன்று நாளில் என்னுடைய எடை 2.4 கிலோ குறைந்தது. உணவுபற்றிய விளிப்புணர்வு வந்த பின் ஒருவருட காலத்தில் 7 கிலோ எடை குறைந்து மிகுந்த ஆரோக்கியமாக இருப்பதாக உணர்கிறேன்.

Unknown said...

முகாமிற்கு நேரில் சென்று வந்ததை போன்று இருந்தது. முகாம் எத்தனை நாட்கள் நடைபெறும்.

S.Venkatachalapathy said...

திரு ராஜு தினகரன் அவர்களே,
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. இந்தத் தொகுப்பு 3 நாள் முகாம் பற்றியது. அரவிந்த ஆஸ்ரமம், ராஜபாளையத்தில் ஒரு வாரம் முகாம் கூட உண்டு. முதலில் 3 நாள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.

lucas said...

மிக பயனுள்ள பதிவு.மிக்க நன்றி.

Post a Comment